சபரிமலை சீராய்வு மனுக்கள்.. 9 நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றம்.. 13ம் தேதி முதல் விசாரணை ஆரம்பம்
டெல்லி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட சீராய்வு மனுக்களை 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு ஜனவரி 13-ஆம் தேதி முதல் விசாரிக்க உள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், 2018 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. அனைத்து வயது பெண்களும் கோவிலுக்குள் செல்லலாம் என்று தீர்ப்பில் கூறப்பட்டது.
இதையடுத்து பெண்கள் பலரும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு தரிசனத்துக்கு சென்றனர். ஆனால் அவர்கள் வழியிலேயே தடுத்து நிறுத்தி ஆண், பக்தர்களால் திருப்பி அனுப்பப்பட்டனர். வலதுசாரி அமைப்பினர் தீவிர போராட்டங்களை முன்னெடுத்தனர்.
இதையடுத்து தீர்ப்புக்கு எதிராக சீராய்வு மனுக்கள் பலவும் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. அப்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் உள்ளிட்ட, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இந்த சீராய்வு மனுக்கள் மீது கடந்த வருடம் நவம்பர் 14ம் தேதி தீர்ப்பு வழங்கியது.
அதில் மூன்று நீதிபதிகள் சீராய்வு மனுவை, கூடுதல் நீதிபதிகள் (7 நீதிபதிகள்) அடங்கிய அமர்வுக்கு அனுப்பி வைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கினர். இரண்டு நீதிபதிகள் ஏற்கனவே வழங்கிய தீர்ப்பு சரிதான், எனவே சபரிமலை கோவில் அனைத்து வயது பெண்களும் செல்ல வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினர்.
மெஜாரிட்டி நீதிபதிகளின் தீர்ப்பு, கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு இந்த சீராய்வு மனுக்களை, அனுப்பி வைக்கலாம் என்று இருந்ததால், அந்த தீர்ப்பை ஏற்று கூடுதல் நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
சனிப்பெயர்ச்சி 2020 : ரோகிணி, மிருகஷீரிடம், திருவாதிரை நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு பலன்கள்
அதேநேரம், மசூதிகளில் முஸ்லிம் பெண்கள் அனுமதிக்கப்படாது, தர்காக்களில் பார்சி இன பெண்கள் அனுமதிக்கப்படாது ஆகியவற்றையும் சேர்த்தே சபரிமலை வழக்குடன் விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியிருந்தது.
இந்த நிலையில் திங்கள்கிழமை அன்று மாலை உச்சநீதிமன்றம் ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு சபரிமலை மேல்முறையீட்டு வழக்கை விசாரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இஸ்லாமியர்கள் மற்றும் பார்சி இன மக்கள் வழிபாட்டு முறைகளில் கடைபிடிக்கப்படுவதாக, கூறப்படும் பாலின பாகுபாடு தொடர்பாகவும் இந்த அமர்வு விசாரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.