டெல்லியில் விவசாயிகளுடன் நடந்த 9வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு.. முட்டுக்கட்டை தொடர்கிறது
டெல்லி: டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று நடத்திய 9வது சுற்று பேச்சுவார்த்தை நிறைவு பெற்றது.. இந்த பேச்சுவார்த்தையில் விவசாய சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பியூஸ் கோயல் பங்கேற்று பேசினர். பேச்சுவார்த்தையில் எந்த முன்னற்றமும் ஏற்படவில்லை. விவசாயிகள் சட்டங்களை ரத்து செய்வதில் உறுதியாக உள்ளனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் பல நாட்களாக விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்,
அவர்களுடன் மத்திய அரசு இதுவரை 8 முறை நடத்திய பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரம் உச்ச நீதிமன்றம் அண்மையில் விவசாயிகளின் பிரச்சனையை தீர்க்க 4 பேர் கொண்ட குழு அமைக்க உத்தரவிட்டதுடன்,. வேளாண் சட்டங்களையும் இடைக்காலமாக நிறுத்திவைக்கவும் உத்தரவிட்டுள்ளது.
எனினும் விவசாயிகளோ வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளனர். இந்நிலையில் மத்திய அரசு, விவசாயிகளுடன் 9வது சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவித்தது. அதன்படி பேச்சுவார்த்தை நடந்தது. மத்திய அமைச்சர்கள் நரேந்திர தோமர், பியூஸ் கோயல் பங்கேற்று பேசினர்-
பேச்சுவார்த்தைக்கு பின் பேசிய அகில இந்திய கிசான் சபா (பஞ்சாப்) தலைவர் பால்கரன் சிங் பிரார். "மத்திய அரசு பிடிவாதமாக உள்ளது, அது சட்டங்களை ரத்து செய்யாது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் மாற்றங்களை செய்வதற்கு பதில் அதை முழுவதுமாக ரத்து செய்யுமாறு நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். ஆனால் வேளாண் அமைச்சர் இதற்கு எதுவும் கூறவில்லை," என்றார்.
விவசாயிகள் போராட்டம்... ஹரியானா பாஜக அரசுக்கு ஆபத்து? பிரதமரை சந்திக்கும் ஹரியானா துணை முதல்வர்
முன்னதாக நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு முன் ஆஜராக விரும்பவில்லை என்றும், அதன் அமைப்பு குறித்தும் கேள்வி எழுப்பியுள்ள விவசாயிகள் அமைப்பினர்,, அரசாங்கத்துடன் திட்டமிடப்பட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள தாங்கள் தயாராக இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.
"மூன்று வேளாண் சட்டங்களையும் அகற்றி குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (எம்எஸ்பி) சட்ட உத்தரவாதம் அளிக்க அரசாங்கம் ஒரு திட்டத்தை வகுக்க வேண்டும்" என்று பாரதிய கிசான் யூனியன் (பி.கே.யூ) செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் தெரிவித்துள்ளார்.
51 நாட்களாக டெல்லியின் எல்லைகளை சுற்றி நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் இதுவரை. 60 க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை மற்றும் குளிர் காரணமாக இறந்துள்ளனர். "ஜனவரி 26 டிராக்டர் பேரணியை நடத்த முடிவு செய்துள்ளது. இதற்கு தடை கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு முறையிட்டுள்ளது. அப்படி அவர்கள் குடியரசு தினத்தன்று பேரணி நடத்தினால் ,அது தேசத்திற்கே பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று கவலை தெரிவித்துள்ளது.