அதிரடி முடிவு.. நீரவ் மோடி, மெகுல் சோக்சியை 'தூக்கிவர' மே.இ.தீவுகள் கிளம்பும் ஸ்பெஷல் விமானம்
டெல்லி: நிதி மோசடி செய்துவிட்டு தப்பியோடிய, நீரவ் மோடி மற்றும் அவரது மாமா மெகுல் சோக்சியை இந்தியா அழைத்துவர ஏர் இந்தியா தனி விமானம் மேற்கு இந்திய தீவுகளுக்கு விரைய உள்ளது.
மும்பையை சேர்ந்த வைர நகை வியாபாரிகள் நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி. இருவரும் தொழில் அபிவிருத்திக்காக பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.11,600 கோடி கடன் பெற்றனர். ஆனால், கடனை திருப்பிச் செலுத்தாமல் இருவருமே வெளிநாட்டுக்கு தப்பியோடிவிட்டனர்.
நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சி மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. அவர்களுடைய சில சொத்துகளும் முடக்கப்பட்டன.
முதலில், நீரவ் மோடி ஹாங்காங்கில் பதுங்கியிருப்பதாக கருதப்பட்டது. ஆனால் நீரவ் மோடி லண்டனுக்கு தப்பிச் சென்றது பிறகு தெரிய வந்தது. இதன்பிறகு மெகுல் சோக்சி மேற்கு இந்திய தீவுகளின் ஆண்டிகுவாவில் குடியுரிமையைப் பெற்றுவிட்டார்.
பொருளாதார குற்றவாளி
மெகுல் சோக்ஸிக்கு எதிராக சர்வதேச காவல்துறை ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீரவ் மோடியை தப்பியோடிய பொருளாதாரக் குற்றவாளி என அறிவிக்கக் கோரி அமலாக்கத் துறை டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. ஆனால், பதில் மனு தாக்கல் செய்த நீரவ் மோடி தரப்பு, பாதுகாப்பு காரணங்களுக்காகதான் நீரவ் மோடி இந்தியா வர முடியவில்லை என்று தெரிவித்தனர்.
ஏர் இந்தியா விமானம்
இந்நிலையில், நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கு அமலாக்கத்துறை தீவிர ஏற்பாடுகள் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக மேற்கு இந்திய தீவுகளுக்கு அனுப்ப ஏர்-இந்தியா போயிங் தனி விமானம் தயார் நிலையில் உள்ளதாக அமலாக்கத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது நீண்ட தூரம் பயணிக்க வசதி கொண்ட விமானமாகும். இந்த விமானத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளும் செல்ல உள்ளனர்.
ஊழல்வாதிகள்
தேர்தல் நெருங்கும் நிலையில், நீரவ் மோடி மற்றும் மெகுல் சோக்சியை இந்தியாவிற்கு கொண்டு வருவதன் மூலம், தனது அரசியல் மைலேஜ்ஜை அதிகரிக்க முடிவும் என நம்புகிறார் மோடி. அகஸ்ட்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில், இடைத் தரகர் கிறிஸ்டியன் மைக்கேல் இந்தியா அழைத்து வரப்பட்டுள்ளார். இதுபோன்ற நடவடிக்கை தொடரும் என தெரிகிறது.
மதுரையில் பேச்சு
பிரதமர் மோடி இன்று மதுரையில் நடைபெற்ற எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டு விழாவில் பேசுகையில், ஊழல்வாதிகளுக்கு எதிராக தனது அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், வெளிநாட்டில் பதுங்கியுள்ளோரையும் இந்தியா இழுத்துவருவோம் என்றும், மோடி கூறினார். மெகுல் சோக்சி விவகாரம் தொடர்பாகத்தான் மோடி இவ்வாறு கூறியிருக்க கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.