1 மில்லியன் டாலர் வைரங்கள் மோசடி... நீரவ் மோடியின் சகோதரர் மீது குற்றச்சாட்டு!
டெல்லி: பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13, 578 கோடி மோசடி செய்து விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய நீரவ் மோடியின் சகோதரரும், அதே வழக்கில் சி.பி.ஐ.யால் தேடப்பட்டு வருபவருமான நேஹால் தீபக் மோடி மீது அமெரிக்காவில் 1 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைரங்களை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முறைகேடான ஆவணங்கள், பொய்யான தகவல்களை கூறி நேஹால் தீபக் மோடி இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் முக்கியமான பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 13 ஆயிரத்து 578 கோடி ரூபாய் மோசடி செய்து கடன் வாங்கி விட்டு திருப்பிச் செலுத்தாமல் நாட்டை விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார் நீரவ் மோடி. அப்போது அவருடன் அவரது சகோதரர் நேஹால் தீபக் மோடி மற்றும் மாமா மெகுல் சோக்ஷி ஆகியோரும் தப்பியோடிவிட்டனர்.
நேஹால் தீபக் மோடி, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள எல்.எல்.டி டைமண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து சாதகமான கடன் விதிமுறைகள் மற்றும் சரக்குகளின் அடிப்படையில் 2.6 மில்லியன் டாலர் மதிப்புள்ள வைர கற்கள் பெற முறைகேடான ஆவணங்களை தாக்கல் செய்ததாக டிசம்பர் 18-ம் தேதி மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் அலுவலகத்தில் இருந்து ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25-வது நாளை எட்டிய போராட்டம்... மத்திய அரசுக்கு விவசாயிகள் புதிய எச்சரிக்கை!
நேஹால் தீபக் மோடி எல்எல்டி நிறுவனத்தை அணுகி கோஸ்ட்கோ என்னும் நிறுவனத்தினடம் சேர்ந்து கைகோர்ப்பதாக கூறி கிட்டத்தட்ட 800,000 டாலர் மதிப்புள்ள வைரங்களை கோஸ்ட்கோவிடம் விற்பனைக்கு வழங்குமாறு போலியான தகவல்களை கூறினார்.ஏப்ரல் மற்றும் மே 2015 க்கு இடையில் அவர் கோஸ்ட்கோவிற்கு விற்பனை செய்வதற்காக1 மில்லியன் டாலருக்கும் அதிகமான மதிப்புள்ள வைரங்களை எல்.எல்.டி டைமண்ட்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கி மோசடி செய்தார்.
எல்.எல்.டி இறுதியாக மோசடியை உணர்ந்து, மீதமுள்ள தொகையை உடனடியாக செலுத்த வேண்டும் அல்லது வைரங்களை திருப்பித் தர வேண்டும் என்று கோரியது. இருந்தபோதிலும் நேஹால் தீபக் மோடி வைரங்களை விற்று விட்டதாக மன்ஹாட்டன் மாவட்ட வழக்கறிஞர் அலுவலகம் கூறியுள்ளது. ஏற்கெனவே பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்துள்ள வழக்கில் இந்திய சிபிஐ அவரை தேடி வருவது குறிப்பிடத்தக்கது.