மிக விரைவில் இந்தியாவுக்கு நாடு கடத்தப்படும் நீரவ் மோடி.. பிரிட்டன் உள் துறை அமைச்சகம் ஒப்புதல்
டெல்லி: குஜராத்தைச் சேர்ந்த பிரபல வைர வியாபாரி நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள் துறை அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி. நாட்டின் மிகப் பிரபலமான வைர வியாபாரிகளில் ஒருவராக இருந்த இவர், பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடி செய்ததாகப் புகார் எழுந்தது.
இது குறித்து விசாரணை செய்ய முதலில் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இதையடுத்து அவர் உடனடியாக அவர் பிரிட்டனுக்குத் தப்பிச் சென்றார். நீரவ் மோடி மீதான வழக்கை சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர்.
நீதிமன்ற உத்தரவு
நீரவ் மோடி லண்டனுக்குத் தப்பிச் சென்றது உறுதியானதைத் தொடர்ந்து, அவரை மீண்டும் இந்தியாவுக்கு அழைத்து வரும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டிருந்தது. லண்டன் நீதிமன்றத்தில் இது தொடர்பாக இந்தியா தொடர்ந்திருந்த வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி அளித்த லண்டன் நீதிமன்றம் கடந்த பிப்ரவரியில் தீர்ப்பளித்திருந்தது. மேலும், இது தொடர்பான கோப்புகளைப் பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திடம் அனுப்பியிருந்தது.
பிரிட்டன் அரசு அனுமதி
இந்நிலையில், இந்தியா அரசுக்கு மற்றுமொரு வெற்றியாக, நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த பிரிட்டன் உள் துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது. இதன் மூலம் மிக விரைவில் நீரவ் மோடி இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவது உறுதியாகியுள்ளது. இருப்பினும், நாடு கடத்துவதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய நீரவ் மோடிக்கு இன்னும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முறையான வியாபாரம் இல்லை
முன்னதாக கடந்த பிப்ரவரி லண்டன் நீதிபதி நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதி அனுமதி அளித்திருந்தார். அதில் அவர், ரூ.14 ஆயிரம் கோடி வங்கி மோசடியில் நீரவ் மோடிக்கு தொடர்பு இருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன. நீரவ் மோடி முறையான வியாபாரத்தில் ஈடுபட்டார் என்பதை ஏற்க முடியவில்லை என்று தெரிவித்திருந்தார்.
விசாரணைக்கு முகாந்திரம் உள்ளது
மேலும், அவரது பரிவர்த்தனைகளில் முறைகேடுகள் இருப்பதாகவும் இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக நீரவ் மோடி மீது இந்தியா விசாரணை நடத்த முகாந்திரம் உள்ளது என்று கூறி, அவரை நாடு கடத்த உத்தரவிட்டார். இருப்பினும், நீரவ் மோடி தான் நாடு கடத்தப்படுவதைத் தவிர்க்கப் பிரிட்டன் நாட்டில் தொடர்ந்து அகதியாக வாழ விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.