கடைசி தவிப்பு.. விவாகரத்து கோரி.. அழுதும் புரண்டும்.. கடைசிவரை கணவனை காக்க முடியாமல் விதவையான புனிதா
விவாகரத்து பெறாமல் விதவையானார் புனிதா
டெல்லி: கடைசிவரை எடுத்து கொண்ட எல்லா முயற்சியும் கையைவிட்டு போன நிலையில் விதவை கோலத்தில் புனிதாவின் கதறல் திகார் சிறை பகுதியை கிழித்தது!
Recommended Video
குற்றவாளிகளில் ஒருவரான அக்ஷய் குமாரின் மனைவி புனிதா தேவி... பீகாரின் அவுரங்காபாத் நகரில் நபிநகர் பகுதியில் வசித்து வருபவர்... புராணங்களிலே வரும் பதிவிரதை போலதான் புனிதாவும்... மன்னிக்க முடியாத குற்றத்தை கணவர் செய்திருப்பதை மனதளவில்கூட ஏற்க முடியாதவர்!
குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று இந்த 7 வருடமாக நிர்பயாவின் தாயார் ஆஷாதேவி எப்படி எல்லாம் துடித்தாரோ, அதே அளவுக்கு தண்டனை கிடைத்துவிடக்கூடாது என்று போராடியது புனிதாவும்தான்.
அப்பாவி
உண்மையை சொல்ல போனால், புனிதாவுக்கும், இந்த வழக்குக்கும் சம்பந்தம் இல்லைதான்.. கணவன் என்ற ஒரே காரணத்துக்காக தன்னால் முடிந்த சட்டரீதியான நடவடிக்கைகளில் இறங்கினார் இந்த பெண்.. நேற்றுகூட என் கணவர் ஒரு அப்பாவி என்று புனிதாவின் அந்த வார்த்தையில் பரிதாபத்தைதான் பார்க்க முடிந்ததே தவிர, நியாயத்தை இல்லை!
கற்பழிப்பு
"என் கணவர் மேல தப்பான குற்றச்சாட்டு சொல்லப்பட்டிருக்கு.." என்று கண்ணீர் வடித்த புனிதாவால், கணவன் நிரபராதி என்பதை நிரூபிக்க ஒரு முறையும் முடியாமல் போய்விட்டது... என் கணவர் ஒரு அப்பாவி என்று சொன்ன இதே புனிதாதான் அடுத்த நிமிடமே "ஒரு கற்பழிப்பு குற்றவாளியின் விதவை என்ற பெயரோடு வாழ விரும்பவில்லை, அவரை தூக்கிலிடுவதற்கு முன்பே எனக்கு விவாகரத்து தந்துவிடுங்கள்" என்று ஒரு மனு போட்டார்... என்ன ஒரு முரண்பாடான வாதம்?!
நப்பாசை
ஒருநாளுக்கு முன்பு அக்ஷயிடம் விவாகரத்து வாங்கி கொண்டு இவர் என்ன செய்ய போகிறார்? குற்றவாளி கணவன் திருந்திவிட போகிறாரா? அல்லது நிர்பயாதான் திரும்பி வந்துவிட போகிறாரா? எதுவும் இல்லை.. எல்லாம் ஒரு நப்பாசைதான்.. ஏதாவது நடந்து தன் தாலி பாக்கியம் தங்கிவிடாதா என்ற சராசரி பெண்ணின் ஆழ்மனசு தவிப்புதான்!
கொன்றுவிடுங்கள்
நேற்று மதியம் இவர்களுக்கு தண்டனை உறுதி என்று கோர்ட் சொன்னபோது புனிதா அங்குதான் இருந்தார்.. கடைசியாக கணவனை பார்ப்பதற்காகவே டெல்லி வந்திருந்தார். "நேற்று விடிகாலையில் இருந்தே புனிதா பதற்றமாகவே இருந்தார்.. நேரம் செல்ல செல்ல அழ தொடங்கினார்.. என் கணவர் சாகப்போகிறார். என்னையும் கொன்றுவிடுங்கள்.
கதறினார்
"நான் ஏன் வாழவேண்டும்... எனது கணவர் அப்பாவி, நான் ஒரு விதவையாக எனது வாழ்க்கையை தொடர விரும்பவில்லை. கணவர் இறந்துவிட்டால் மனைவியின் நிலை என்ன என்பது இந்த அரசுக்கு தெரியாதா?" என்று அழுதவாறே தரையில் புரண்டு கேட்டார்!! தூக்கு தண்டனை நிறைவேற்றப்படவுள்ள செய்தியை கேட்டவுடனேயே தன்னுடைய செருப்பை கழட்டி தன்னைத்தானே அடித்து கொண்டார்.,.. அப்படியே மயங்கியும் விழுந்தார் இந்த அபலை பெண்.. அப்போதும் புனிதா மீது அனுதாபம் வந்ததே தவிர நியாயம் எழவில்லை!!
பலாத்காரம்
தன் கணவனின் கூட்டாளியான முகேஷ்சிங் ஒருமுறை வழக்கு விசாரணையின்போது சொல்லியிருந்தது புனிதாவுக்கு நினைவிருக்குமா என்று தெரியாது.. "ஒழுங்கா அமர்க்களம் செய்யாமல், போராடாமல் அமைதியாக எங்களை பலாத்காரம் செய்ய விட்டிருந்தால், நாங்கள் அப்படி தாக்கியிருக்க மாட்டோமே" என்றான்.. அதைவிட கொடுமை இவர்களது வக்கீல் சர்மா ஒரு கேள்வி கேட்டார், "தெருவில் இனிப்புகளை வைத்தால் அதை நாய்கள் வந்து சாப்பிடத் தான் செய்யும்?" என்று! இதையெல்லாம் ஒரு பெண்ணாக, மனைவியா, ஒரு தாயாக புனிதா நினைத்து பார்த்திருக்க வேண்டும்!
இறுதி சடங்கு
கணவன் என்ற ஒரே காரணத்துக்காக புனிதா அக்ஷயை மன்னிக்கலாம்.. ஆனால் குற்றத்தின் தன்மை மக்களை மன்னிக்க விடாது. அக்ஷயின் இறுதி சடங்குகளை முடித்து விட்டுதான் புனிதா ஊர் திரும்புவார் என தெரிகிறது... தன் கழுத்தில் இருக்கும் தாலி கயிறை காப்பாற்றி கொள்ள எப்படி எப்படியோ முயற்சி செய்தும் இறுதியில் தோற்றுவிட்டார் புனிதா.
விதவை கோலம்
கணவன் நிர்பயாவை நாசம் செய்த நேரம் புனிதா ஒரு கர்ப்பிணி பெண்.. இப்போது அந்த ஆண் குழந்தைக்கு 6 வயதாகிறது.. வருங்காலத்தில் இந்த பிஞ்சு எந்த மாதிரியான தாக்கத்தை, அவமானங்களை இச்சமூகத்தில் சந்திக்குமோ தெரியாது.. ஆனால் பல பெண்களை நாசம் செய்ய துணியும், கணவன்மார்களுக்கு புனிதாவின் இந்த விதவை கோலம் ஒரு பாடம்தான்!!