நிர்பயா குற்றவாளிகளுக்கு ஹைகோர்ட் அதிரடி செக்.. ஒன்றாகவே தூக்கு என்றும் பரபரப்பு தீர்ப்பு
டெல்லி: நிர்பயா வழக்கு குற்றவாளிகள் ஒரு வாரத்தில் சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும் என ஹைகோர்ட் கெடு விதித்துள்ளது. அதேநேரம் நிர்பயா வழக்கு குற்றவாளிகள் 4 பேரையும் ஒன்றாகவே தூக்கிலிட வேண்டும் என்றும் டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது.
2012 டிசம்பரில் நிர்பயா என்று மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி பலியானார்
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்தார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது. குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்ககப்பட்டது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தன.
கருணை மனு
இந்நிலையில் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கருணை மனுக்கள் தாக்கல் செய்த காரணத்தால் இவர்களுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடித்தது. முதலில் முகேஷ் சிங் கருணை மனு தாக்கல் செய்த காரணத்தால் டெத் வாரண்ட் ஜனவரி 22ம் தேதியில் இருந்து பிப்ரவரி 1ம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
தூக்கிலிட தடை
இறுதியில் பிப்ரவரி 1ம் தேதி தண்டனை நிறைவேற்றபட இருந்த நிலையில இறுதியாக வினய் குமார் கருணை மனு தாக்கல் செய்தார். இந்த சூழ்நிலை காரணமாக 4பேரின் தண்டனையை நிறைவேற்ற டெல்லி நீதிமன்றம் கடந்த ஜனவரி 31ம் தேதி இடைக்கால தடை விதித்தது. மறு உத்தரவு வரும் வரை 4 குற்றவாளிகளையும் தூக்கிலிடக் கூடாது என்றும் தீர்ப்பளித்தது.
ஒன்றாகவே தூக்கு
இந்த தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் சார்பில் டெல்லி ஹைகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை விசாரித்த டெல்லி ஹைகோர்ட், நிர்பயா கொலை குற்றவாளிகள் ஒரே வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டவர்கள் என்பதால் ஒன்றாகவே அவர்களை தூக்கிலிட வேண்டும். அவர்களை தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க முடியாது. நிர்பயா குற்றவாளிகள் 1 வாரத்துக்குள் சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும். சட்ட நடைமுறைகளை காரணம் காட்டி குறறவாளிகள் காலம் தாழ்த்துவதை ஏற்க முடியாது என்று தீர்ப்பளித்தது.
கோர்ட் தீர்ப்பு
அத்துடன் டெல்லி நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரான மத்திய அரசு , திகார் சிறை நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தள்ளுபடி செய்து டெல்லி ஹைகோர்ட் தீர்ப்பளித்தது. இதன் காரணமாக அடுத்த ஒரு வாரத்திற்கு பிறகு குற்றவாளிகளின் சட்டநடைமுறைகள் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே நீதிமன்றம் புதிதாக டெத் வாரண்ட் விதிக்கும் பட்சத்தில் நிர்பயா குற்றாவளிகள் அடுத்த இரு வாரத்திற்குள் தூக்கிலிடப்பட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.