7 வருட சட்ட போராட்டம்.. துளியும் கலங்கவில்லை.. விடாமல் போராடிய ஆஷா தேவி.. நிர்பயா தாய் வென்ற கதை!
நிர்பயா கொலை வழக்கில் இன்று குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
டெல்லி: நிர்பயா கொலை வழக்கில் இன்று குற்றவாளிகள் 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. இதற்கு பின் நிர்பயாவின் அம்மா ஆஷா தேவியின் கடும் சட்ட போராட்டம் முக்கிய பங்கு வகிக்கிறது .
Recommended Video
16 டிசம்பர் மாதம் 2012ல் டெல்லியின் முனிர்கா பகுதியில் அந்த சம்பவம் நடந்தது. டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.இந்த கொலை நாட்டையே உலுக்கியது. இவருக்கு டெல்லியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு அது பலன் அளிக்கவில்லை.
அதன்பின் சிங்கப்பூருக்கு சிகிச்சை செய்வதற்காக அவசரமாக நிர்பயா அழைத்து செல்லப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி 2012 டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார். இதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள்.
யார் எல்லாம்
அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. நிர்பயா குற்றவாளிகளை இன்று அதிகாலை 5.30 மணிக்கு தூக்கிலுடுகிறார்கள். இந்த வழக்கில் இவர்களுக்கு தூக்கு தண்டனை கிடைக்க முக்கிய காரணம் நிர்பயாவின் அம்மா ஆஷா தேவிதான். இந்த வழக்கில் 2013 ஜனவரியில் இருந்து சரியாக 7 வருடங்கள் மிக தீவிரமாக ஆஷா தேவி சட்ட போராட்டம் நடத்தினார்.
சட்ட போராட்டம்
ஆம், தன் மகளை பலி கொடுத்த கையோடு ஆஷா தேவி தீவிரமான சட்ட போராட்டங்களை முன்னெடுக்க தொடங்கிவிட்டார். தன்னுடைய மகளை எல்லோரும் நிர்பயா என்று அழைத்த போது கொஞ்சம் கூட கவலைப்படாமல் தன்னுடைய மகளின் பெயரை வெளிப்படையாக வெளியே சொன்னார். என் மகளின் பெயரை வெளியே சொல்ல நான் ஏன் வெட்கப்பட வேண்டும். என் மகள் என்ன தவறு செய்தால்.
குற்றம் செய்தவர்கள்
குற்றம் செய்தவர்கள் உயிரோடு இருக்கும் போது என் மகள் மட்டும் என்ன தவறு செய்தால். அவள் பெயரை நான் சொல்வேன் என்று மீடியா முன் ஆஷா தேவி கோபமாக பேசிய தருணங்களும் இருக்கிறது. மீடியா முன் மட்டுமல்ல இந்த வழக்கு விசாரணையின் போதும் கூட ஆஷா தேவி கோர்ட்டில் கோவமாக பேசி இருக்கிறார். மொத்தம் 6 முறைக்கும் மேல் இவர் கோர்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்துள்ளார்.
வாக்குமூலம்
நிர்பயா மரணத்திற்கு முன் கொடுத்த வாக்குமூலம் தொடங்கி கடைசி நேரத்தில் அவள் பட்ட கஷ்டங்கள் என்று அனைத்தையும் கோர்ட்டில் பேசியதில் ஆஷா தேவியின் பங்கு முக்கியமானது. எதிர்தரப்பு வக்கீல்கள் கேட்ட கேள்விக்கும் கூட இவர் கூலாக பதில் அளித்த சம்பவங்கள் நடந்து இருக்கிறது. என்ன நடந்தாலும் உறுதியாக இந்த நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை வாங்கி கொடுப்பேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.
தற்கொலை செய்தார்
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ராமன் சிங் சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். அப்போது அதற்காக மிகவும் வருத்தப்பட்ட ஆஷா தேவி, அவர்கள் தற்கொலை செய்வதை என்னால் ஏற்க முடியாது. எனக்கு சட்டப்படி நீதி கிடைக்க வேண்டும். சட்டப்படி இவர்கள் எல்லோரையும் தண்டிக்க வேண்டும். அதுதான் என் இலக்கு. அதை நான் நிறைவேற்றியே தீருவேன் என்று ஆஷா தேவி குறிப்பிட்டு இருந்தார்.
என்ன தடங்கல்
இந்த வழக்கில் ஆஷா தேவிக்கு பல தடங்கல்கள் வந்தது நிர்பயா தேவி வழக்கில் சிறுவன் ஒருவன் வயது காரணமாக வெளியே வந்தது பெரிய திருப்பமாக பார்க்கப்பட்டது. அதன்பின் மீதம் இருந்த 4 பேரும் டெல்லி ஹைகோர்ட்டில் முறையீடு, டெல்லி ஆளுநரிடம் முறையீடு, டெல்லி முதல்வரிடம் முறையீடு, உச்ச நீதிமன்றத்தில் முறையீடு, மீண்டும் மேல்முறையீடு, குடியரசுத் தலைவரிடம் கருணை மனு, சர்வதேச நீதிமன்றத்தில் முறையீடு என்று தொடர்ந்து குற்றவாளிகள் 4 பேரும் போராடினார்கள்.
எதிர்கொண்டார்
இதை அனைத்தையும் ஆஷா தேவி கலக்கம் இன்றி தீவிரமாக எதிர்கொண்டார். எனக்கு கவலை இல்லை. என் மகள் இந்தியாவின் மகள். அவளுக்கு கண்டிப்பாக நீதி கிடைக்கும். இதற்கான எத்தனை சட்ட போராட்டங்களையும் எதிர்கொள்வேன் என்று ஆஷா தேவி குறிப்பிட்டு இருந்தார். அதே போல் ஒவ்வொரு முறையை வழக்கு மேல்முறையீடு நடந்த போதும் அனைத்தையும் கோர்டில் சென்று ஆஷா தேவி எதிர்கொண்டார்.
இன்று கூட
இன்று அந்த 4 பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட உள்ள நிலையில், இன்றும் கூட குற்றவாளி பவன் குப்தா சார்பில் தொடுக்கப்பட்ட வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் நடந்தது. அதன்பின் உச்ச நீதிமன்றத்திற்கு இந்த வழக்கு சென்றது.அதிகாலை 2.30 மணிக்கு இந்த வழக்கு விசாரணை அவசர அவசரமாக நடந்தது. அப்போதும் கூட கவலை இன்றி, கலக்கம் இன்றி உறுதியாக ஆஷா தேவி உச்ச நீதிமன்றத்தில் நம்பிக்கையோடு அமர்ந்து இருந்தார்.
என்ன நம்பிக்கை
அவரின் நம்பிக்கை வீண் போகவில்லை.. சரியாக உச்ச நீதிமன்றம் அதிகாலை 3.30 மணிக்கு அந்த தீர்ப்பை வழங்கியது. அதில் 4 குற்றவாளிகளின் கருணை மனுவை நிராகரித்தது தவறு இல்லை. அவர்களை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. தூக்கு தண்டனையை இன்றே நிறைவேற்றலாம் என்று உத்தரவிட்டது. கண்ணீல் கண்ணீருடன் வெளியே வந்த ஆஷா தேவி, அங்கிருந்த பெண் செய்தியாளர்களை கட்டிப்பிடித்து முத்தமிட்டார்... அது அவர் தன் மகளுக்கு கொடுத்த முத்தம்!
வெற்றி
வெளியே வந்த ஆஷா தேவி, நம்முடைய சட்ட போராட்டம் வென்றுவிட்டது. எனக்கு உதவியாக இருந்த மக்களுக்கும் நாட்டிற்கும் நன்றி. முக்கியமாக பெண்கள் எல்லோருக்கும் நன்றி. என் மகளுக்கு இன்று நீதி கிடைத்துவிட்டது. இது பெண்களுக்கான நீதி. மொத்த நாட்டிற்கான நீதி. இனிதான் நாங்கள் நிம்மதியாக மூச்சு விடுவோம் என்று குறிப்பிட்டார். அதன்பின் செய்தியாளர்களை நோக்கி 'வி' என்று வெற்றிக்குறி காட்டினார்... ஆம் இது இந்திய பெண்களுக்கான வெற்றிதான்!