நிர்பயா வழக்கு.. தூக்கு தண்டனைக்கு எதிரான முகேஷ் சிங்கின் மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்!
நிர்பயா வழக்கில் குற்றவாளி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி: நிர்பயா வழக்கில் குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்ததற்கு எதிராக குற்றவாளி முகேஷ் குமார் சிங் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லியில் பேருந்தில் நிர்பயா கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி டிசம்பர் 29-ஆம் தேதி உயிரிழந்தார்.
இந்த கொலை நாட்டையே உலுக்கியது. இதில் குற்றவாளிகள் நால்வரும் தூக்கு கயிறை எதிர்நோக்கி இருக்கிறார்கள். அக்சய் குமார் சிங், வினய் குமார் சர்மா, பவன் குப்தா, முகேஷ் சிங் ஆகிய 4 குற்றவாளிகளுக்கும் கடந்த 2017-ம் ஆண்டு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
குற்றவாளிகள் 4 பேரையும் முதலில் ஜனவரி 22-ந்தேதி காலை 7 மணிக்கு தூக்கில் போட சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.ஆனால் இதில் தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இரண்டு முறை குற்றவாளிகள் மனு அளித்தனர் .
இந்த வழக்கில் இரண்டு பேர் தாக்கல் செய்த மனு நீதிபதிகள் என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, நாரிமன், பானுமதி, அசோக் பூஷண் அடங்கிய அமர்வு முன்பு, உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் குற்றவாளிகளின் தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்தது. குற்றவாளிகளை தூக்கில் போடுவதற்கு தடை விதிக்க முடியாது. சீராய்வு மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
தனக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று குற்றவாளி முகேஷ் சிங் தனியாக டெல்லி ஹைகோர்ட்டில் மீண்டும் மனுதாக்கல் செய்தார். அதையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதனால், குற்றவாளி முகேஷ் சிங் கடைசி வாய்ப்பாக குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பினார். தூக்கு தண்டனை ரத்து செய்ய கோரி, முகேஷ் சிங் கருணை மனு அனுப்பினார். ஆனால் இந்த மனுவை டெல்லி ஆளுநர், குடியரசுத் தலைவர் ஆகியோர் நிராகரித்தனர்.
இவர் கருணை மனு நிராகரிக்கப்பட்டதால்,நிர்பயா வழக்கில் புதிய தூக்கு தண்டனை தேதியை டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் அறிவித்துள்ளது. பிப்ரவரி 1ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து குடியரசுத் தலைவர் தன்னுடைய கருணை மனுவை நிராகரித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து முகேஷ் சிங் மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். குடியரசுத் தலைவர் யோசித்து முடிவு எடுக்கவில்லை, ஜெயிலில் என்னை டார்ச்சர் செய்தனர் என்று கூறி, முகேஷ் சிங் மனுதாக்கல் செய்தார். ஆனால் இந்த மனுவையும் இன்று உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
குடியரசுத் தலைவர் எடுத்த முடிவு சரிதான் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. இந்த நிலையில் இன்னொரு பக்கம் தன்னுடைய தூக்கு தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று இன்னொரு குற்றவாளி அக்சய் குமார் சிங் மனுதாக்கல் செய்துள்ளார். இதன் மீதான விசாரணை நடக்க உள்ளதால், எப்படியும் தூக்கு தண்டனை தள்ளிப்போக வாய்ப்புள்ளது.