ஜன.22ல் நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம் இல்லை.. திகார் சிறை நிர்வாகம்
Recommended Video
டெல்லி: 2012ம் ஆண்டு டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 4 பேரை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்குமாறு திகார் சிறை அதிகாரிகள் இன்று தில்லி அரசிடம் கேட்டுக் கொண்டனர். குற்றவாளிகள் தாக்கல் செய்த கருணை மனுக்கள் தீர்த்து வைக்கப்படும் வரை தூக்கிலிட முடியாது என்பதால் இந்த கோரிக்கையை அவர்கள் டெல்லி அரசிடம் வைத்துள்ளனர்.
டெல்லியில் கடந்த 2012ம் ஆண்டு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ராம் சிங் என்ற குற்றவாளி சிறையிலேயே தற்கொலை செய்து கொண்டார். மற்றொரு குற்றவாளிக்கு 18வயது நிறைவடையாததால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் தாகூர், பவன் குமார் ஆகிய நான்கு பேரின் தூக்கு தண்டனையை டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
டெல்லி நீதிமன்றம்
நான்கு பேருக்கும் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்கு டெல்லி நீதிமன்றம் சமீபத்தில் வாரண்ட் பிறப்பித்தது. அதன்படி வரும் ஜனவரி 22ம் தேதி 4 பேருக்கும் திகார் சிறையில் தூக்கிலிடப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
கருணை மனு
இந்நிலையில் தண்டனையை நிறைவேற்றும் வாரண்டை எதிர்த்து குற்றவாளிகளில் ஒருவரான முகேஷ் சிங் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அத்துடன் குடியரசுத் தலைவருக்கு கருணை மனுவும் அனுப்பி உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மன்மோகன் சங்கீதா, திங்கரா செஹல் அமர்வு, வாரண்டில் எந்த தவறும் இல்லை. அதனால் அதற்கு தடை விதிக்க முடியாது என்றும் மனு தள்ளுபடி செய்யப்படுவதாகவும் கூறியது. அதேநேரம் மனுதாரர் டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகலாம் என்று தீர்ப்பளித்தது
டெல்லி அரசுக்கு நோட்டீஸ்
இதையடுத்து டெல்லி செஷன்ஸ் நீதிமன்றத்தில் முகேஷ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவில் குடியரசுத் தலைவருக்கு அனுப்பிய கருணை மனு நிலுவையில் உள்ளதால் தண்டனையை நிறைவேற்றுவதை ஒத்திவைக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக பதில் அளிக்குமாறு டெல்லி அரசுக்கும் மாணவியின் பெற்றோருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
மனுவை நிராகரிக்க பரிந்துரை
இதனிடையே முகேஷ் சிங் தாக்கல் செய்த கருணை மனுவை நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்கு டெல்லி மாநில அரசு பரிந்துரை செய்துள்ளது. மின்னல் வேகத்தில் செயல்பட்டுள்ளோம். கருணை மனுவை நிராகரிக்குமாறு பரிந்துரை கடிதத்தை துணை நிலை ஆளுநருக்கு அனுப்பி உள்ளோம். அது மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும் உடனடியாக அனுப்பப்பட்டு விட்டது என டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கூறினார்.
திகார் சிறை நிர்வாகம்
இதனிடையே கருணை மனு மீது முடிவெடுக்கும் வரை குற்றவாளிகளை தூக்கிலிட முடியாது என்றும் எனவே குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை டெல்லி அரசு அறிவிக்க வேண்டும் என்றும் டெல்லி திகார் சிறை நிர்வாகம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் 22ம் தேதி நிர்பயா வழக்கு குற்றவாளிகள் தூக்கிலிடப்பட வாய்ப்பு இல்லை என்பது உறுதியாகி உள்ளது.