கடுமையான மன உளைச்சல்.. சாப்பிடுவதும் ரொம்ப கம்மியாகிடுச்சி.. மரண பயத்தில் நிர்பயா கொலையாளிகள்
டெல்லி: நிர்பயா பலாத்கார வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ள நான்கு குற்றவாளிகளும், கடுமையான மன உளைச்சலில் இருப்பதாகவும், மிகவும் குறைவாகவே சாப்பிடுவதாகவும், டெல்லி திஹார் சிறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
நாட்டையே உலுக்கிய டெல்லி மருத்துவ மாணவி பலாத்காரம் மற்றும் வழக்கில் அனைத்து வகை, சட்ட போராட்டங்கள் நடத்தியும், தூக்கு தண்டனை என்பது, 4 குற்றவாளிகளுக்கும், உறுதி செய்யப்பட்டு விட்டது.
பிப்ரவரி 1ஆம் தேதி காலை 6 மணிக்கு, 4 குற்றவாளிகளையும், தூக்கிலிட டெல்லி நீதிமன்றம் வாரண்ட் பிறப்பித்து உள்ளது.
இதுதொடர்பாக திகார் சிறை வட்டாரங்கள் கூறுகையில், தூக்கு தண்டனையை நிறைவேற்றுவதற்காக இப்போதிருந்தே சிறை ஊழியர்கள் தரப்பில், பயிற்சிகள் நடைபெற்று வருகிறது. சரியாக கருவிகள் வேலை செய்கிறதா என்பது உள்ளிட்ட அனைத்தும் பரிசோதிக்கப்படுகிறது. அனைத்து சட்ட போராட்டத்திலும், தோற்று விட்டதால் தூக்கு தண்டனை உறுதி என்ற நிலையில் இருப்பதை குற்றவாளிகள் உணர்ந்துள்ளனர்.
எனவே அவர்கள் மிகுந்த மன உளைச்சலில் இருக்கிறார்கள். இதனால் மிகவும் குறைவாகச் சாப்பிடுகிறார்கள். தினமும் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை அவர்கள் உடல்நிலை மோசமடையவில்லை. இவ்வாறு சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக கூடுதல் ஐஜி ராஜ்குமார் கூறியதாவது: 4 குற்றவாளிகளைத் தூக்கிலிடுவதற்கு முன்பாக அவர்களது கடைசி விருப்பங்கள் எழுதிக் கொடுக்குமாறு கேட்டுள்ளோம். 4 பேரின் பதில்களுக்காக காத்திருக்கிறோம். இதுவரை 4 பேரும் எந்த பதிலும் தரவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, துடிக்க துடிக்க பலாத்காரம் செய்து, எவ்வளவோ கெஞ்சியும், கொடுமையாக ஓடும் பஸ்சில் இருந்து கீழே தூக்கி வீசிய கொடூரர்களுக்கு, இந்த மரண வேதனை தேவைதான் என்று சக கைதிகளே, மகிழ்ச்சி வெளிப்படுத்தி வருவதாகவும், சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.