நிர்பயா வழக்கு.. குற்றவாளிகள் 4 பேரும் மரண தண்டனை நிறைவேற்றப்படும் சிறை எண் 3 க்கு மாற்றம்
டில்லி: நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளும் வியாழக்கிழமை டெல்லி திகார் சிறை வளாகத்தின் சிறை எண் 3 க்கு மாற்றப்பட்டனர். அங்கு அவர்கள் தூக்கிலிடப்பட உள்ளார்கள் என்று சிறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வினய் ஷர்மா, அக்ஷய் குமார் சிங், முகேஷ் குமார் சிங் மற்றும் பவன் குப்தா ஆகிய நான்கு மரண தண்டனை குற்றவாளிகள் ஜனவரி 22 ஆம் தேதி தூக்கிலிடப்படவிருந்தனர்.
இந்நிலையில் தண்டனை கைதி முகேஷ் குமார் சிங்கின் கருணை மனு குடியரசுத் தலைவரிடம் நிலுவையில் உள்ளதால் குற்றவாளிகள் 4 பேரின் மரண தண்டனையை ஒத்திவைக்க வேண்டும் என்று டெல்லி அரசு புதன்கிழமை உயர் நீதிமன்றத்தில் கூறியது. இதை ஏற்று நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.
நிர்பயா கொலை குற்றவாளி முகேஷின் கருணை மனுவை ஜனாதிபதிக்கு அனுப்பியது மத்திய அரசு
டெல்லி அரசு பரிந்துரை
முன்னதாக நேற்று டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா இதுபற்றி கூறுகையில், முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை நிராகரிக்குமாறு துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்பிவிட்டோம். இந்த மனு உடனடியாக உள்துறை அமைச்சகத்துக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. நாங்கள் முடிந்தவரை விரைவாக செயல்பட்டுள்ளோம் என்றார்.
குடியரசுத் தலைவர் கையில்
இதனிடையே இன்று மத்திய அரசு முகேஷ் குமார் சிங்கின் கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி உள்ளது. அவர் எடுக்கும் முடிவுக்கு பிறகே குற்றவாளிகள் தூக்கிலிடப்படுவது உறுதியாகும்.
தூக்கிலிடப்படும் இடம்
இந்நிலையில் நிர்பயா கூட்டு பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளும் வியாழக்கிழமை திகார் சிறை வளாகத்தின் சிறை எண் 3 க்கு மாற்றப்பட்டனர், அவர்கள் அங்கு தான் தூக்கிலிடப்படுவார்கள் என்று உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நிர்பயா படுகொலை
டெல்லியில் ஓடும் பேருந்தில் கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் மாதம் நிர்பயா என்ற மருத்துவ மாணவி 6 பேர் கொண்ட கும்பலால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். ஓடும் பேருந்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதில் 4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவர் சிறையில் தற்கொலை செய்து கொண்டார். ஒருவர் சிறுவர் என்பதால் மூன்று ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.