நிர்பயா நிதி..பெண்கள் படுகொலை..லோக்சபாவில் அனல் கேள்விகள் கேட்ட தமிழக பெண் எம்.பிக்கள்
நிர்பயா நிதியத்தின் கீழ் மொத்தம் 38 திட்டங்களுக்காக ரூ.9228.50 கோடி ஒதுக்கப்பட்டு உயர்மட்ட நிதி குழுவின் பரிசீலனையில் உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
டெல்லி: நிர்பயா நிதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் என்ன? நிர்பயா நிதியத்தின் பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் விவரங்கள் என்ன? கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி பற்றிய விவரங்கள் என்ன? என்று லோக்சபாவில் திமுக எம்.பி கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
லோக்சபாவில் பட்ஜெட் கூட்டத் தொடர் 4 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. 31ஆம் தேதி பொருளாதார அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. பிப்ரவரி 1ஆம் தேதி 2023-24ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். கடந்த 2 நாட்களாக அதானி விவகாரம் பெரும் புயலை கிளப்பி வருகிறது.
இந்த நிலையில் திமுக துணைப் பொதுச் செயலாளரும் மக்களவை திமுக குழு துணைத் தலைவரும் எம்பியுமான கனிமொழி எழுத்துப்பூர்வமாக கேட்ட கேள்வியில், 'நிர்பயா நிதியின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டங்களின் விவரங்கள் என்ன? நிர்பயா நிதியத்தின் பயன்பாட்டிற்காக தமிழ்நாட்டில் பல்வேறு துறைகளில் இருந்து பெறப்பட்ட முன்மொழிவுகளின் விவரங்கள் என்ன? கடந்த ஐந்தாண்டுகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்ட நிர்பயா நிதி பற்றிய விவரங்கள் என்ன? என்று கேட்டிருந்தார்.
இதற்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணி அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், 'தற்போதுவரை, நிர்பயா நிதியத்தின் கீழ் மொத்தம் 38 திட்டங்களுக்காக ரூ.9228.50 கோடி ஒதுக்கப்பட்டு உயர்மட்ட நிதி குழுவின் பரிசீலனையில் உள்ளது. இந்தத் திட்டங்களை செயல்படுத்துவதில் சில தடுமாற்றங்கள் நடைமுறை ரீதியில் இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட 38 திட்டங்களில் சில நேரடியாக மத்திய அரசு அமைச்சகங்களாலும், மத்திய அரசுத் துறைகளாலும் செயல்படுத்தப்படுகின்றன. இத்திட்டங்களில் பெரும்பாலானவை மாநில, யூனியன் பிரதேச அரசு நிர்வாகங்களால்தான் செயல்படுத்தப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் அமைச்சகங்கள், செயல்படுத்தும் துறைகளில் இருந்து வந்த முன்மொழிவுகளின் அடிப்படையில் தமிழ்நாட்டுக்கு நிர்பயா நிதியத்தில் இருந்து 2017-18 நிதியாண்டு முதல் 2021-22 நிதியாண்டு வரை ரூ.314.28 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
தென்சென்னை தொகுதி திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் லோக்சபா விதி எண் 377ன் கீழ் பெண் படுகொலை தொடர்பான கோரிக்கையை வலியுறுத்தினார். அதில், 'பெண்களுக்கு எதிரான வன்முறை என்பது அவர்களின் மனம், உடல் மற்றும் ஆன்மாவின் மீதான தாக்குதல் மட்டுமல்ல. மாறாக அது ஆண் மேலாதிக்க உணர்வின் தவறான வெளிப்பாடாகும். இந்த வகையான வன்முறை, குற்றவியல் நீதி அமைப்பில் தவிர்க்கப்பட்டு உள்ளது. அதுமட்டுமின்றி தேசிய குற்ற ஆவண காப்பக பதிவிலும் தனியாக பதிவு செய்யப்படவில்லை.
இந்திய சொட்டு மருந்தை பயன்படுத்தியவர் அமெரிக்காவில் உயிரிழப்பு! சென்னை நிறுவனத்திற்கு பெரிய சிக்கல்
இந்திய தண்டனைச் சட்டமும் பெண் படுகொலை பற்றி விரிவான வரையறையை உள்ளடக்கவில்லை. வரதட்சணை தொடர்பான மரணங்கள் அல்லது குடும்ப தகராறின் பின்னணியில் நடந்ததாக குறிப்பிடுகின்றன. எனவே, இந்திய தண்டனைச் சட்டத்தில் பெண் படுகொலையை விரிவாக சேர்க்க தேவையான நடவடிக்கைகளைத் தொடங்கவும், பயனுள்ள வகையில் நம்பகமான தரவு சேகரிப்பை எளிதாக்க வேண்டும்' எனவும் தமிழச்சி தங்கப்பாண்டியன் தெரிவித்துள்ளார்.