நிர்பயா வழக்கு.. குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல்
டெல்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில், குற்றவாளிகளுக்கான தூக்கு விவகாரத்தில், மத்திய அரசு தொடர்ந்த வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது, உச்சநீதிமன்றம்.
நிர்பயா வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட நான்கு குற்றவாளிகளையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும் என்று பிப்ரவரி 5ம் தேதி டெல்லி ஹைகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், குற்றவாளிகள் ஒவ்வொருவரும், ஏதாவது காரணத்தை சொல்லி, மரண தண்டனையை தள்ளிப்போடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், நான்கு குற்றவாளிகளையும் தனித்தனியாக தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று, மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இதை ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில், மத்திய அரசு மேல்முறையீடு செய்தது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விசாரணை.. ரஜினிகாந்த் ஆஜராகவில்லை.. விலக்கு அளித்தார் நீதிபதி!
இந்த வழக்கு இன்று, நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான நீதிபதிகள் அசோக் பூஷண் மற்றும் நவின் சின்ஹா ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் முன்னிலையில் வந்தது.
இந்த வழக்கை மார்ச் 5ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. ஆனால், ஏற்கனவே, 4 குற்றவாளிகளுக்கும், மார்ச் 3ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிட டெல்லி கோர்ட் வாரண்ட் பிறப்பித்திருந்தது. எனவே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், குற்றவாளிகளுக்கு மார்ச் 3ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படுவது சந்தேகம்.