நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு.. 10 கயிறுக்கு ஆர்டர்.. 2 ஹேங்மேன் ரெடி.. பரபரக்கும் திகார் சிறை
Recommended Video
டெல்லி: நிர்பயா பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கில் மரண தண்டனை பெற்றுள்ள நான்கு குற்றவாளிகளும், எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடப்பட கூடிய சூழ்நிலை இருப்பதை சிறைத் துறை வட்டார நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
23 வயது மருத்துவ மாணவி நிர்பயா கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக, அக்ஷய் சிங் தாக்கூர், முகேஷ் சிங், பவன் குப்தா மற்றும் வினய் சர்மா ஆகிய நான்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். கீழமை நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை இவர்களுக்கு மரண தண்டனையை உறுதி செய்தது.
குடியுரிமை மசோதாவுக்கு எதிரான போராட்டம்.. குவாஹாத்தியில் விமானங்கள் ரத்து
தள்ளுபடி
குடியரசுத் தலைவருக்கு இவர்கள் தனித்தனியாக அனுப்பிய கருணை மனுக்களும் சமீபத்தில், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் டெல்லியில் இவர்கள் அடைக்கப்பட்டுள்ள திகார் சிறைச்சாலையில் நடைபெற்று வரக்கூடிய பரபரப்பு காட்சிகள் என்பது இந்த குற்றவாளிகள் எப்போது வேண்டுமானாலும் தூக்கிலிடலாம் என்பதை உறுதி செய்வதாக அமைந்துள்ளன.
கயிறு ஆர்டர்
நான்கில் மூன்று குற்றவாளிகள், திகார் சிறைச்சாலையில் தான் நீண்ட காலமாக அடைக்கப்பட்டிருந்தனர். பவன் குப்தா என்ற ஒரு குற்றவாளி, சமீபத்தில் திடீரென திகார் சிறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது, இது இந்த யூகங்களை மேலும் வலுப்படுத்தி உள்ளது. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கு தூக்கிலிட பயன்படுத்தக்கூடிய, சிறப்பு கயிறுகளை அனுப்பி வைக்கும்படி பீகாரில் உள்ள பக்ஸர் சிறைச்சாலைக்கு திகார் சிறைச்சாலை நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பீகார் சிறை
பீகார், பக்ஸர் சிறை அதிகாரிகள் 10 ஹேங்கிங் கயிறுகளை தயாரிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர். பக்ஸர் சிறை என்பது தூக்கு கயிறுகளைத் தயாரிப்பதற்குத் தேவையான நிபுணத்துவம் கொண்ட நாட்டின் ஒரே சிறைச்சாலையாகும். இந்த வகை கயிறுகள், அதிக எடையை தாங்க போதிய வலுவானதாக இருக்க வேண்டும் என்பதால், இந்த சிறைச்சாலையில்தான் கயிறு தயாரிக்கப்படுகிறதாம்.
கடந்த காலம்
பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை குற்றவாளி தனஞ்சய் சாட்டர்ஜி, 2001 நாடாளுமன்றத் தாக்குதல் குற்றவாளி அப்சல் குரு மற்றும் 1993 மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளி யாகூப் மேமன் ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்க பக்ஸர் சிறைச்சாலை கயிறுகளை வழங்கியுள்ளது. 2008 மும்பை தாக்குதலில் தண்டனை பெற்ற அஜ்மல் கசாப், பக்சர் சிறைச்சாலையால் வழங்கப்பட்ட கயிற்றால் தூக்கிலிடப்பட்டார்.
ஹேங்மேன்
இதேபோல உத்தரப் பிரதேச மாநில சிறைத்துறை நிர்வாகம் இரண்டு ஹேங்மேன்களை தயாராக வைத்திருக்கும்படி திகார் சிறை நிர்வாகம், வேண்டுகோள் விடுத்துள்ளது. அதுவும் மிகக்குறுகிய காலத்திற்குள் இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
அவசரம் ஏன்
தெலுங்கானாவில் கால்நடை பெண் மருத்துவர் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் என்கவுண்டர் செய்யப்பட்டனர். இதையடுத்து நிர்பயா கொலை குற்றவாளிகளுக்கு இன்னும் தண்டனை நிறைவேற்றப்படாத விவகாரம் நாடு முழுக்க பேசு பொருளாக மாறியது. எனவே சூட்டோடு சூடாக 4 குற்றவாளிகளையும் தூக்கில் தொங்க விட்டு விட வேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் எப்போது வேண்டுமானாலும் நிர்பயா கொலை குற்றவாளிகளை தூக்கிலிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.