நிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு.. டெல்லி கோர்ட்
டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் மார்ச் 20-ல் தூக்கில் போட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
Recommended Video
2012 டிசம்பரில் நிர்பயா என்ற மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார்.
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
தூக்கு தண்டனை
இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த டெல்லி நீதிமன்றம் 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்ககப்பட்டது. முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
கருணை மனு
நிர்பயா வழக்கு குற்றவாளிகள் முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய நான்கு பேருக்கு கடந்த ஜனவரி 22ம் தேதி டத் வாரண்ட் ( தூக்கிலிடும் தேதி) பிறப்பிக்கப்பட்டது. அப்போது முகேஷ் சிங் கருணை மனு தாக்கல் செய்த காரணத்தால் பிப்ரவரி 1ம் தேதிக்கு தள்ளிப்போனது. அப்போது முகேஷ் சிங்கின் கருணை மனு குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
டெல்லி நீதிமன்றம்
அதன்பின்னர் 15 நாட்கள் முடியும் தருவாயில் வினய் சர்மா அக்சய் குமார் ஆகியோர் கருணை மனுக்களை தாக்கல் செய்தார்கள். இதன் காரணமாக பிப்ரவரி 1ம்தேதியில் இருந்து தூக்கு தண்டனை காலவரையின்றி தள்ளிப்போனது. குற்றவாளிகளுக்கு ஒரு வாரம் வரை டெல்லி நீதிமன்றம் கெடு விதித்தது. அதற்குள் சட்டப்பூர்வமான அனைத்து நிவாரணங்களையும் நாடிக்கொள்ள வேண்டும் என கடந்த பிப்ரவரி 12ம் தேதி உத்தரவிட்டது. அத்துடன் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது.
பவன் குப்தா வழக்கு
இந்நிலையில் வினய் குமார் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகிய குற்றவாளிகளின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். ஆனால் அக்ஷசய் குமாரின் கருணை மனுவை முறையாக தாக்கல் செய்யாததால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் மீண்டும் அவர் கருணை மனு தாக்கல் செய்தார். அத்துடன் பவன் குப்தா நீதிமன்றத்தில் தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
பவன்குப்தா வழக்கு
இதற்கு முன்னதாகவே டெல்லி பட்டியலா நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளுக்கு வழங்கி கெடு முடிந்த பின்னர் மீண்டும் டத் வாரண்ட் வழங்கியது. இதன்படி மார்ச் 3ம் தேதி நான்கு பேரையும் தூக்கிலிட வேண்டும் உத்தரவிட்டது. ஆனால் அக்சய் குமார் மற்றும் பவன் குப்தா ஆகியோர் தாங்கள் தாக்கல் செய்த மனு மற்றும் வழக்கை காரணம் காட்டி தண்டனையை நிறைவேற்ற தடை விதிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தை மீண்டும் நாடினர்.
பவன் கருணை மனு
ஆனால் டெல்லி நீதிமன்றம் மனு மற்றும் வழக்கை காரணம் காட்டி தண்டனையை நிறைவேற்றுவதற்கு தடை விதிக்க மறுத்துவிட்டது. இது ஒருபுறம் எனில் கடந்த மார்ச் 2ம் தேதி பவன்குப்தாவின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதேபோல் அக்சய் குமாரின் இரண்டாவது கருணை மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதையடுத்து நிர்பயா கொலையாளிகளில் இதுவரை கருணை மனு தாக்கல் செய்யாமல் இருந்த பவன் குப்தாவும் மார்ச் 2ம் தேதி கருணை மனு தாக்கல் செய்தார்.
கடைசி மனுவும் நிராகரிப்பு
இதன் காரணமாக நிர்பயா குற்றவாளிகள் நான்கு பேருக்கும் மார்ச் 3ம் தேதி தண்டனையை நிறைவேற்ற டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த மார்ச் 2ம் தேதி மாலை தடை விதித்தது. இதனால் அவர்கள் தண்டனை மூன்றாம் முறையாக தள்ளிப்போனது. இந்நிலையில் பவன் குப்தாவின் கருணை மனுவை நேற்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார்.
காலை 5.30 மணிக்கு தூக்கு
இதையடுத்து டெல்லி திகார் சிறை நிர்வாகம் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து டெல்லி நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகள் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளதால் அவர்கள் நான்கு பேரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை தூக்கிலிடப்பட போவது உறுதியாகி உள்ளது.