நிர்பயா குற்றவாளிகள் மார்ச் 20ம் தேதி தூக்கிலிடப்படுவார்களா.. மீண்டும் ஒரு சிக்கல்
டெல்லி: அனைத்து சட்ட வாய்ப்புளும் முடிந்துவிட்டதால் நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரையும் வரும் மார்ச் 20-ல் தூக்கில் போட டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் உச்ச நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகளை தனித்தனியாக தூக்கில் போடுவது குறித்த வழக்கை 23ம் தேதி விசாரிப்பதாக அறிவித்துள்ளதால் சிக்கல் எழுந்துள்ளது.
டெல்லி மருத்துவ கல்லூரி மாணவி நிர்பயா கடந்த 2012ம் ஆண்டு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களை மார்ச் 3ம் தேதி டெல்லி திகார் சிறையில் தூக்கிலட வேண்டும் என்று கடந்த 17ம் தேதி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் இந்த வழக்கில் முகேஷ் குமார் சிங், வினய் குமார் சர்மா மற்றும் அக்ஷய் குமார் ஆகிய மூன்று குற்றவாளிகளின் கருணை மனுக்கள் ஏற்கனவே ஜனாதிபதியால் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதில அக்சய் குமார் மனு கடந்த முறை சரியாக தாக்கல் செய்யாத காரணத்தால் இரண்டாவது முறையாக கருணை மனு அனுப்பி இருந்தார். அந்த மனுவையும் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நிராகரித்தார். இதையடுத்து நிர்பயா கொலையாளிகளில் இதுவரை கருணை மனு தாக்கல் செய்யாமல் இருந்த பவன் குப்தாவும் மார்ச் 2ம் தேதி கருணை மனு தாக்கல் செய்தார். இவரது மனுவை நேற்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் நிராகரித்தார்.
நிர்பயா பலாத்கார குற்றவாளிகளுக்கு மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு.. டெல்லி கோர்ட்
நான்கு பேருக்கும்
இதையடுத்து டெல்லி திகார் சிறை நிர்வாகம் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்கும்படி டெல்லி நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து டெல்லி நீதிமன்றம் நிர்பயா குற்றவாளிகள் முகேஷ்குமார் (32), பவன் குப்தா (25), வினய் சர்மா (26), அக்சய் குமார் சிங் (33) ஆகியோருக்கு மார்ச் 20ம் தேதி அதிகாலை 5.30 மணிக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நேற்று உத்தரவிட்டது
உச்ச நீதிமன்றம் உத்தரவு
நிர்பயா கொலை குற்றவாளிகள் நான்கு பேரின் அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளதால் அவர்கள் நான்கு பேரும் மார்ச் 20ம் தேதி அதிகாலை தூக்கிலிடப்பட போவது உறுதி என்று கூறப்பட்டது. இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த 5ம் தேதி உத்தரவு பிறப்பித்திருந்தது.
கேலிக்கூத்து
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு, டெல்லி அரசு ஆகியவை மேல்முறையீடு செய்தன. இதன் மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பானுமதி தலைமையிலான அமர்வில் நேற்று நடைபெற்றது. அப்போது மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா வாதிடுகையில், "நிர்பயா குற்றவாளிகள் மரண தண்டனையை தாமதப்படுத்த ஒவ்வொருவராக மேல்முறையீடு செய்து நீதிமன்றத்தின் உத்தரவை கேலிக்கூத்தாக்கினர்.
அனுமதி கொடுங்கள்
இன்று ஒரு வழக்கில் 4 பேர் குற்றவாளிகள் உள்ளனர். நாளை 10 அல்லது 20 குற்றவாளிகளுக்கு தண்டனை அறிவிக்கப்படலாம். இவர்கள் எல்லாம் தனித்தனியாக மேல்முறையீடு செய்தால், தண்டனை நிறைவேற்றுவதில் காலதாமதம் ஏற்படும். தற்போது குற்றவாளிகளுக்கு வரும் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்ற விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதை நிறைவேற்ற அனுமதி அளிக்க வேண்டும்" என்றார்.
20ம் தேதி நிறைவேறுமா
இதையடுத்து நீதிபதி பானுமதி தலைமையிலான உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு பிறப்பித்த உத்தரவில் " ஒரு வழக்கில் மரண தண்டனை பெற்ற குற்றவாகிளை ஒரே நேரத்தில் தூக்கிலிடுவதா? அல்லது தனிதனியாக தூக்கிலிடுவதா? என்பது தான் கேள்வி. இது குறித்து மார்ச் 23ம் தேதி விசாரிக்கப்படும் என்றனர். விசாரணை நீதிமன்றம் மார்ச் 20ம் தேதி தூக்கு தண்டனை நிறைவேற்றப்படும் என்று உத்தரவிட்டுள்ள நிலையில், இந்த வழக்கு 23ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், நிர்பயா குற்றவாளிகள் 4 பேருக்கும் தண்டனைநிறைவேறுமா என்று மீண்டும் சந்தேகம் எழுந்துள்ளது.