புரிஞ்சுக்கங்க.. கோர்ட் வளாகத்தில் நிர்பயா தாயார் திடீர் போராட்டம்.. கண்ணீர் மல்க உருக்கமாக பேட்டி
டெல்லி: நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுதில் தாமம் ஏற்படுவதாக கூறி டெல்லி கோர்ட் வளாகத்தில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2012 டிசம்பரில் நிர்பயா என்று மருத்துவ மாணவி ஓடும் பேருந்தில் 6 பேர் கொண்ட கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு நடுரோட்டில் தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அந்த மாணவி சில நாளில் சிங்கப்பூரில் சிகிச்சை பலன் இன்றி இறந்து போனார் .
இந்த வழக்கில் ராம்சிங், முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் ராம்சிங், டெல்லி திகார் சிறையில் 2013 ம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். 2013 ம் ஆண்டு செப்டம்பரில் இந்த வழக்கில் டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதிமன்றம் அதிரடி
முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா, அக்சய் குமார் சிங் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 18 வயது நிரம்பாத சிறுவன் என்பதால் இளம் குற்றவாளிக்கு 3 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்ககப்பட்டது. இந்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஒரு வாரம் கெடு
இந்நிலையில் முகேஷ் சிங், வினய் சர்மா, அக்சய் குமார் சிங் ஆகியோர் அடுத்தடுத்து கருணை மனுக்கள் தாக்கல் செய்த காரணத்தால் இவர்களுக்கு தண்டனை நிறைவேற்றுவதில் தாமதம் ஏற்பட்டது. எனினும் இவர்களின் அனைவரின் கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்னும் பவன் குப்தா மட்டும் கருணை மனு தாக்கல் செய்யவில்லை.இந்நிலையில் குற்றவாளிகளுக்கு ஒரு வாரம் வரை டெல்லி நீதிமன்றம் கெடு விதித்துள்ளது. அதற்குள் சட்டப்பூர்வமான அனைத்து நிவாரணங்களையும் நாடிக்கொள்ள வேண்டும் என அண்மையில் உத்தரவிட்டது. அத்துடன் குற்றவாளிகள் 4 பேரின் தூக்கு தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்துள்ளது.
கோர்டில் போராட்டம்
இந்த தீர்ப்பை எதித்து உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு மற்றும் திகார் சிறை நிர்வாகம் சார்பில மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த சூழலில் டெல்லி செசன்ஸ் நீதிமன்ற வளாகத்தில் நிர்பயாவின் தாயார் ஆஷா தேவி திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கு அறிவிக்கப்பட்ட தூக்கு தண்டனையை நிறைவேற்றுதில் தாமதம் ஏற்படுவதாக கூறி போராட்டம் நடத்தினார்.
தயவு செய்து உத்தரவிடுங்க
இதையடுத்து செய்தியாளர்களிடம் கண்ணீர் மல்க பேட்டி அளித்த ஆஷா தேவி, எனது உரிமைகள் என்ன? மடிந்த கைகளுடன் நான் நிற்கிறேன். தயவுசெய்து மரண உத்தரவு பிறப்பிக்கவும். நானும் மனிதன். இது ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது. "என் மகளுக்கு நீதி கிடைக்க நான் அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருக்கிறேன். இந்த குற்றவாளிகள் தாமதமான தந்திரங்களை பயன்படுத்துகிறார்கள். நீதிமன்றத்தால் இதை ஏன் புரிந்து கொள்ள முடியவில்லை என்று எனக்குத் தெரியவில்லை.
|
புதிய வழக்கறிஞர்
"நான் இப்போது மனஉறுதியையும், நம்பிக்கையையும் இழந்து கொண்டிருக்கிறேன். குற்றவாளிகளின் தாமத தந்திரங்களை நீதிமன்றம் புரிந்து கொள்ள வேண்டும். இப்போது பவனுக்கு ஒரு புதிய வழக்கறிஞர் வழங்கப்பட்டால், அவர் வழக்கு கோப்புகளை ஆராயந்து செல்ல அதிக நேரத்தை எடுத்துக்கொள்வார்" என வேதனையுடன் நிர்பயாவின் தாயார் தெரிவித்தார்.