கடன் தள்ளுபடி விவகாரம்.. காங். மக்களை தவறாக வழிநடத்துகிறது.. நிர்மலா சீதாராமன் பரபரப்பு விளக்கம்
டெல்லி: கடன் நீக்க விவகாரம் குறித்து விளக்கம் அளித்துள்ள மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மோசடியாளர்களுக்கு கடன் வழங்கியது முந்தைய காங்கிரஸ் ஆட்சியில்தான் என்று குற்றம்சாட்டினார். அத்துடன் காங்கிரஸ் கட்சி கடன் நீக்க விகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.
Recommended Video
கடந்த மார்ச் 2020ம் ஆண்டுடன் ஒரு நிதியாண்டு முடிந்த நிலையில, கடந்த செப்டம்பர் மாதத்தின் முடிவில் நாட்டில் கடனை வேண்டுமென்றே திருப்பிச்செலுத்தாத 50 தொழில் அதிபர்களின் கடன் விவரங்கள் நீக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்தது.
இந்த விவாகரம் குறித்து டுவிட்டரில் ராகுல் காந்தி கூறும் போது, வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்கள் உள்பட 50 தொழில் அதிபர்களின் ரூ.68000 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ மற்றும் மற்றும் பாஜக இடையே இந்த விவகாரத்தில் மோதல் வெடித்துள்ளது.
பழி போடுகிறது காங்
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார். அவர் தனது பதிவுகளில், "எப்போதும் போலவே கடன் நீக்க விவகாரத்தையும் முழுமையாக ஆராயாமல் காங்கிரஸ் கட்சி மத்தியஅரசின் மீது பழி போடுகிறது. கடன் நீக்க விவகாரத்தில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கர்ஜேவாலாவும் நாட்டு மக்களை தவறாக வழிநடத்துகிறார்கள்.
காங்.ஆட்சியில் தள்ளுபடி
காங்கிரஸ் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் தங்களுக்கு நெருக்கமான தொழில் அதிபர்களுக்கு சலுகை வழங்குவதை நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த விவகாரத்தில் காங்கிரஸ் தான் சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். கடந்த 2009முதல் 2014ம் ஆண்டு வரையிலைன காலகட்டத்தில் 145226 கோடி கடனை வணிக ரீதியாக வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. அத்துடன் 2006 முதல் 2008 வரையிலான காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட பெரும்பாலான கடன்கள் பின்னாளில் வாரக்கடனாக மாறியது என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனே கூறியுள்ளார்,
மன்மோகனிடம் கேளுங்கள்
வேண்டுமென்றே கடனை திருப்பி செலுத்தாதவர்களில் கடந்த ஆட்சியாளர்களின் ஒற்றை தொலைப்பேசி அழைப்பு மூலம் கடன் பெற்றவர்கள் ஆவர். எனவே கடன் தள்ளுபடி குறித்து ராகுல் காந்தி பேசுவதற்க முன்பு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் கலந்து ஆலோசிக்க வேண்டும். தற்போதைய நிலையில் கடன் மோசடியாளர்களின் வாரக்கடன் விவரங்கள் வங்கி புத்தகங்களில் இருந்து நீக்கப்பட்டாலும் அவர்களிடம் இருந்து கடனை வசூலிக்கும் நடவடிக்கைகள் தொடரும்.
நிர்மலா சீதாராமன் பதில்
வேண்டுமென்றே ஏமாற்றுபவர்கள் மீது பிரதமர் மோடி அரசுதான் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுவரை 9967 கடன் மீட்பு வழக்குகள் தொடுக்கப்பட்டடுள்ளது. 3515 எப்ஐஆர்கள் போடப்பட்டுள்ளது, நீரவ் மோடி, மெகுல் சோக்ஸி, மல்லையாவிடம் இருந்து முடக்கப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 18332.7 கோடி ஆகும்.
இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப
இங்கிலாந்தில் இருக்கும் விஜய் மல்லையாவின் ரூ.8,040 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அவரிடம் இருந்து ரூ.1,693 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தப்பி ஓடிய குற்றவாளியான விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு திருப்பி அனுப்ப இங்கிலாந்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மெகுல் சோக்சி வழக்கு
மெகுல் சோக்சி வழக்கில் ரூ.1,936 கோடியே 95 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது . அவருடைய ரூ.597 கோடியே 75 மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. ஆன்டிகுவா நாட்டில் உள்ள மெகுல் சோக்சியை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக்கொண்டு உள்ளோம். அதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நிரவ் மோடி வழக்கில் ரூ.1,898 கோடி சொத்துகள் முடக்கப்பட்டுள்ளது. அத்துடன் ரூ.489 கோடியே 75 லட்சம் மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. அவர் இங்கிலாந்து நாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்" இவ்வாறு நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.