அடுத்த 3 மாதங்களுக்கு நீங்கள் பிஃஎப் செலுத்த வேண்டாம்.. ஆனால் ஒரு நிபந்தனை.. நிர்மலா அறிவிப்பு
டெல்லி: அடுத்த 3 மாதங்களுக்கு ஊழியர்கள் பிஎஃப் பணத்தை செலுத்த தேவையில்லை. அதை அரசே செலுத்தும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கொரோனா வைரஸால் இந்தியாவில் 600-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பலி எண்ணிக்கையும் 12 ஆக உயர்ந்துவிட்டது. இந்த நிலையில் கொரோனா அச்சத்தால் பாதிக்கும் மக்களுக்கு மத்திய அரசு நிதி உதவிகளை அறிவித்துள்ளது.
இதுகுறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகையில் 80 கோடி ஏழைகளுக்கு 5 கிலோ அரிசி, 5 கிலோ கோதுமை, 3 மாதத்திற்கு கூடுதலாக வழங்கப்படும். ஒரு கிலோ பருப்பும் இலவசமாக வழங்கப்படும்.
முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ 1000 வீதம் 2 தவணைகளாக 3 மாதங்களுக்கு வழங்கப்படும். 100 பேருக்கு குறைவான ஊழியர்களை கொண்ட நிறுவனங்களின் ஊழியர்கள் 3 மாதத்திற்கு பிஎஃப் செலுத்த தேவையில்லை. அதை மத்திய அரசே செலுத்தும். அது போல் உரிமையாளர்கள் அந்த பணியாளர்களுக்கு செலுத்த வேண்டிய தொகையையும் அரசே செலுத்தும்.
அந்த நிறுவனத்தில் 90 சதவீதம் ஊழியர்கள் 15 ஆயிரத்துக்கு குறைவாக ஊதியம் பெறுவோராக இருந்தால்தான் இந்த சலுகை. இதன் மூலம் 4.8 கோடி தொழிலாளர்கள் பயன்பெறுவர். ஈபிஎஃப் திட்டத்தை முறைப்படுத்த செய்ய அரசு தயாராக உள்ளது.
அதன்படி தொழிலாளர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் கடனோ அல்லது ஊதியத்திலிருந்து 75 சதவீதம் பணமோ இதில் எது குறைவோ அதை திருப்பி செலுத்தாத முன்பணமாக பெற்றுக் கொள்ளலாம் என நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.