நவீன இந்திரா காந்தியாக உருவெடுத்த நிர்மலா சீதாராமன்
இந்திரா காந்தி போலவே வீரியத்துடன் செயல்பட்டு வருகிறார் நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்ட அறிவிப்புகளின் பயனாக நாட்டில் உள்ள மொத்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை அடியோடு பாதிக்கும் கீழே குறைந்து விட்டது. ஒரு வகையில் நவீன இந்திரா காந்தியாக இன்று உருவெடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன்.
ஒரு காலத்தில் இந்தியாவில் தனியார் வங்கிகளே அதிகம் இருந்தன. தடுக்கி விழுந்தால் ஏதாவது ஒரு தனியார் வங்கியில்தான் போய் நிற்க வேண்டும். அந்த அளவுக்கு நாடு முழுவதும் தனியார் வங்கிகளே அதிகம் இருந்தன.
அவற்றை நாட்டுடமையாக்கிய பெருமை இந்திரா காந்திக்கே உண்டு. நாடு முழுவதும் பரந்து விரிந்து கிடந்த தனியார் வங்கிகளை நாட்டுடமையாக்கினார் இந்திரா காந்தி. நாட்டிலேயே மிகப் பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி உருவெடுத்தது.
ஏக போக உரிமை
1969-ம் ஆண்டு இந்திரா காந்தியின் ஆட்சி காலத்தில் 25 தனியார் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. அப்போது பொதுமக்களின் பணத்தை பாதுகாப்பதற்காகவே வங்கிகள் இவ்வாறு தேசியமயமாக்கப்பட்டன. இதன் பலனும் மக்களை வெகுவாகவே சென்றடைந்தது. வங்கிகளை தேசியமயமாக்கியதுடன், நிதித்துறையில் அரசுக்கு ஏகபோக உரிமையையும் பெற்றுத்தந்தார் இந்திரா காந்தி.
பொதுத்துறை
ஆனால் இப்போது நிலைமை அப்படி இல்லை. தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் என்றாலே அடிவயிற்றில் அலறல் வந்துபோகிறது. பாடுபட்ட உழைத்து சேர்த்த பணத்துக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிலேயே பாதுகாப்பு இல்லை என்ற எண்ணம் வந்துவிட்டது. மக்களின் நிலை தான் இப்படி என்றால், பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி, அந்த கடனை திரும்ப செலுத்தப்படாத தொகையும் நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.
நிர்மலா
இன்று நாட்டின் முக்கிய வங்கிகளில் ஒன்றாக திகழும் இந்தியன் வங்கி ஒரு காலத்தில் தனியார் வங்கிதான். இன்று கிட்டத்தட்ட இன்னொரு இந்திரா காந்தியாக உருவெடுத்துள்ளார் நிர்மலா சீதாராமன். அன்று இந்திரா காந்தி தனியார் வங்கிகளை இணைத்து நாட்டுடமையாக்கினார். இன்று நாட்டுடமையாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளை இணைத்துள்ளார் நிர்மலா சீதாரமன்.
கிளைகள்
நாட்டில் தற்போது 27 பொதுத்துறை வங்கிகள் உள்ளன. வங்கிகள் இணைப்பின் மூலம் இவை அப்படியே 12 ஆக குறைகின்றன. இதன் மூலம் அதிக அளவிலான கிளைகளை இந்த பொதுத்துறை வங்கிகள் பெறும். மக்களுக்கும் சேவை எளிதாகும். அதேசமயம், ஆட்குறைப்பு என்ற நடவடிக்கை வருமா என்ற அச்சமும் ஊழியர்களிடையே தொக்கி நிற்பதை இல்லையென்றும் ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. ஆனால் வங்கி விஷயத்தில், இந்திராவின் வழியில் நிர்மலா சென்று கொண்டுள்ளார் என்பது மட்டும் தெளிவாகி வருகிறது.