"பூமி திருத்தி உண்"- பட்ஜெட் உரையில் ஆத்திச்சூடியை மேற்கோள் காட்டிய நிர்மலா சீதாராமன்
Recommended Video
டெல்லி: பூமி திருத்தி உண் என பட்ஜெட் உரையில் ஆத்திச்சூடியை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினார்.
2020-2021-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது அவர் தனது உரையை தொடங்கினார்.
அவர் கூறுகையில் ஏழைகள் நேரடியாக பலனடையும் வகையில் பல புதிய வழிமுறைகள் கொண்டு வரப்பட்டுள்ளன. கடந்த 2 ஆண்டுகளில் வருமான வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையில் புதிதாக 15 லட்சம் பேர் இணைந்துள்ளனர்.
உரையாற்றும் போதே.. திடீரென்று காஷ்மீரியில் பேசிய நிர்மலா சீதாராமன்.. கைதட்டி பாராட்டிய எம்பிக்கள்
20 லட்சம் விவசாயிகள்
தற்போது உலகில் 5ஆவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளோம். இந்தியாவின் வளர்ச்சியை உலக நாடுகள் உற்று நோக்குகின்றன. சோலார் மின்சாரம் தயாரிக்கும் இயந்திரங்கள் அமைக்க 20 லட்சம் விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றார் நிர்மலா. பின்னர் பூமி திருத்தி உண் என விவசாயிகளுக்கு ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டி அறிவுரை வழங்கினார்.
மேற்கோள்
அவர் கூறுகையில் பூமி திருத்தி உண் என்ற மூன்று வார்த்தையில் விவசாயத்தின் மகத்துவத்தை ஔவையார் கூறியுள்ளார். எனவே நிலத்தை பயனுள்ள வகையில் விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்பதன் பொருள் ஆகும் என்றார் நிர்மலா. கடந்த ஆண்டு ஜூலை மாதம் பட்ஜெட் உரையின் போது புறநானூற்றை மேற்கோள் காட்டியிருந்தார்.
நெல் அழியும்
அதில் யானை புக்க புலம் போல என்ற பாடலை வாசித்தார். அதற்கான விளக்கத்தையும் அவர் ஆங்கிலத்தில் கூறினார். ஒரு குறிப்பிட்ட நிலத்தில் முற்றிக் காய்ந்திருக்கும் நெல்லை அறுத்து, அரிசி உணவுக் கவளமாக்கி யானைக்குத் தந்தால் அது பல நாட்களுக்கு வரும். அதே நிலத்தில் யானை புகுந்து உண்டால் அதன் வாயில் புகும் உணவைக் காட்டிலும் காலால் மிதித்து வீணாக்கும் நெல் அதிகமாக அழியும்.
வரிப்பிண்டம்
இந்த உண்மை நெறியை அறிந்து அறிவுடை அரசன் வரி வாங்கும்போது நாட்டின் செல்வம் கோடி கோடியாகப் பெருகும். இந்த நெறியை உணராத அரசன் அறிவு வலிமை இல்லாமல் மெல்லியனாகி, வரிசைச் சிறப்பு அறியாத தன் சுற்றத்தாரோடு இரக்கம் இல்லாமல் வரிப்பிண்டத்தை விரும்பி வாங்கினால், யானை தானே புகுந்து உண்ணும் நிலம் போல அரசனும் துய்க்காமல் அவன் நாடும் கெட்டொழியும் என்று அவர் விளக்கம் அளித்தார்.
விவசாய நிலங்கள்
அதாவது அரசை நடத்த தேவையானதை மட்டுமே மக்களிடம் வசூலிக்கிறோம் என்றும் நிர்மலா தெரிவித்தார். கடந்த முறை வரி வசூல் குறித்து புறநானூற்றை மேற்கோள் காட்டி பேசிய நிர்மலா சீதாராமன், தற்போது விவசாய நிலங்களின் முக்கியத்துவத்தை விளக்கும் ஆத்திச்சூடியை மேற்கோள்காட்டியுள்ளார் நிர்மலா சீதாராமன்.