மக்கள் வங்கி கணக்கில் பணம் டெபாசிட் செய்யுமா மத்திய அரசு? நிர்மலா சீதாராமன் இன்று என்ன அறிவிப்பார்?
டெல்லி: கோவிட் -19ன் பொருளாதார தாக்கத்தை சமாளிப்பதற்கான அறிவிப்புகளை, நாடாளுமன்றத்தில், இன்று மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, சமீபத்தில் தொலைக்காட்சியில் உரையாற்றியபோது பிரதமர் நரேந்திர மோடி கூறினார். மேலும் இதை சரி செய்வதற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் பொருளாதார பணி குழு அமைக்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
இந்த குழு சம்பந்தப்பட்ட துறைகளுடன் ஆலோசனை நடத்தி உரிய மீட்பு நடவடிக்கைகளை எடுக்கும் என்று மோடி கூறியிருந்தார்.
இந்த நிலையில் நிர்மலா சீதாராமன் அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். நாடாளுமன்றத்தில் இன்று நிதி மசோதா மீதான பதில் உரையின்போது அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடக் கூடும் என்று தெரிகிறது.
வைரஸ் பாதிப்பு காரணமாக, தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன, பலரும் பணிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர், எனவே அவர்களுக்கு மத்திய அரசு உதவிகளை அறிவிக்கும் என்று தெரிகிறது.
குடிமக்களுக்கு உணவுப் பொருள் வினியோகம் சரியாக சென்றடைய வேண்டியது அவசியம், ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் குறிப்பிட்ட அளவுக்கு பணத்தை மத்திய அரசு டெபாசிட் செய்ய வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகள் வலுத்து வரும் நிலையில் நிர்மலா சீதாராமன் எந்த மாதிரியான அறிவிப்பை வெளியிடப் போகிறார், என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஒருவேளை, அரசின் நிதி நிலையை மேம்படுத்த, சில வரியை அதிகரிப்பதாக அறிவித்துவிடுவோரா என்ற சந்தேகமும் நிலவுகிறது. எனவே நிர்மலா சீதாராமன் அறிவிப்பு மீதே அனைவர் கண்களும் உள்ளது.