நிர்மலா சீதாராமன் அறிவிப்பால் உடனடி பலன் இல்லையே.. பணப் புழக்கத்திற்கு என்ன வழி? எழும் கேள்விகள்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று அறிவித்த விவசாயிகள் மற்றும் புலம்பெயர் தொழிலாளர் நலன் சார்ந்த அறிவிப்புகளில் ஏமாற்றம் மிஞ்சியதாக பொருளாதார வல்லுனர்கள் மற்றும் தொழிற்சங்கத்தினர் தெரிவிக்கிறார்கள்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, ஊரடங்கு உத்தரவு நடைமுறையில் இருப்பதால், பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதை மீட்டெடுப்பதற்காக 20 லட்சம் கோடி மதிப்பிலான நிதி பேக்கேஜ் அறிவிக்கப் போவதாக பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.
இதன் தொடர்ச்சியாக நேற்று மாலை 4 மணி மற்றும் இன்று மாலை 4 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார், அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
ரேஷன் அட்டை இல்லாவிட்டாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு இலவச உணவு பொருட்கள்.. நிர்மலா அறிவிப்பு
உடனடி உதவி எங்கே
இருப்பினும் இந்த அறிவிப்புகளில் பல, ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவித்ததுதான் என்பதும், இருநாட்களும் அறிவித்த இந்த திட்டங்கள் உடனடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் இல்லாமல், நீண்ட கால அறிவிப்புகளாக இருப்பதாகவும், இந்த துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
பணப் புழக்கம்
மக்கள் கையில் பணப்புழக்கம் இருந்தால்தான், அவர்கள் பொருட்களை வாங்குவார்கள். பொருட்கள் வாங்கினால் தான் உற்பத்தி பெருகும். "தேவைதான் அளிப்பை தீர்மானிக்கிறது" என்பது பொருளாதாரத்தின் அடிப்படை விதி. ஆனால் இதை தூண்டுவதை விட்டுவிட்டு, தொழில் நிறுவனங்கள் செயல்படுவதற்கான சலுகைகளை அறிவித்து பலனில்லை என்கிறார்கள் பொருளாதார வல்லுனர்கள்.
வருமான வரி தள்ளுபடி எங்கே
நாட்டில் புதிதாக வீட்டு உபயோகப் பொருள் உள்ளிட்ட பொருட்களை வாங்க கூடியவர்கள் நடுத்தர வர்க்கத்தினர்தான். அவர்களில் பெரும்பாலானோர் மாத சம்பளக்காரர்கள். எனவே 15 லட்சம் ரூபாய் வரை ஆண்டு வருமானம் கொண்டவர்களுக்கு இந்த வருடம் வருமான வரி பிடித்தம் கிடையாது என்பது போன்ற அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தால் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த உதவி இருக்கும். ஆனால் வருமான வரி செலுத்தும் காலக்கெடு மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளதே தவிர, தள்ளுபடி செய்யப்படவில்லை என்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
கடன் தள்ளுபடி தேவை
அதே போலத்தான், இன்றும் கூட விவசாயக் கடனுக்கான வட்டி மானியத்தை (Interest subvention) மே 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதாக அறிவித்தாரே தவிர, கடன்களை தள்ளுபடி செய்யவில்லை. விவசாயிகள் விவசாய கூலிகள் கிடைக்காமலும், இடு பொருள் கிடைக்காமலும், கஷ்டப்படும் இந்த நிலையில் வட்டி மானியத்தை நீட்டித்து என்ன பலன்?
கடன் கிடைக்குமா
முத்ரா லோன் என்ற பெயரில் 50,000 வரை சாலையோர வியாபாரிகள் கடன் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற கடன்களுக்கான வட்டி 2% குறைக்கப்படுவதாகவும், 1500 கோடி ரூபாய் வரை வட்டி மானியமாக பெறமுடியும் என்றும் தெரிவித்துள்ளார் நிர்மலா சீதாராமன். ஆனால் வேலைவாய்ப்பு இல்லாத இந்த காலகட்டத்தில், இந்த கடன் உதவியை வங்கிகள் வழங்குமா என்று தொழிற்சங்கத்தினர் கேள்வி எழுப்புகிறார்கள். தொழிலாளர்கள் கடன் கேட்டு வங்கிக்குச் சென்றால், தர முடியாது என்று கூறும் சூழ்நிலை உள்ள நிலையில், இந்த பணத்தை இலவசமாக கொடுக்க வேண்டுமே தவிர, கடனாக கொடுப்பது நடைமுறை சாத்தியமற்றது என்கிறார்கள் அவர்கள்.
தொழிலாளர்கள் வீடு எப்போது
புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு குறைந்த வாடகையில் வீடு கட்டி கொடுக்கப்படும் என்பதெல்லாம் இனி வரும் காலத்திற்கான தேர்தல் வாக்குறுதி மாதிரி இருக்கிறது. இப்போது அவர்கள் வீடின்றி நடந்தே ஊர்களுக்கு போவதற்கு பதில் என்ன என்று தொழிற்சங்க நிர்வாகிகள் கேட்கிறார்கள். ஆக மொத்தம், எல்லாமே கடன் மற்றும் கொஞ்ச நாள் தள்ளிப்போடும் நடவடிக்கையாக இருப்பதாகவும் வேறு நடவடிக்கை இல்லை என்றும் தெரிவிக்கிறார்கள் அவர்கள்.