விவசாயத் துறை கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி.. தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு கிளஸ்டர்- நிர்மலா அதிரடி
டெல்லி: விவசாயத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Recommended Video
இன்று மாலை 4 மணிக்கு 3வது கட்டமாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்து வருகிறார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
பிரதமர் மோடி கடந்த 12ம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். அப்போது, கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகளில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ.20 லட்சம் கோடியில் சிறப்பு திட்டம் அமல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.
இதையடுத்து அந்த திட்டம் பற்றிய தகவல்களை நிர்மலா சீதாராமன் நேற்று முன்தினம் தெரிவித்தார். 'சுயசார்பு இந்தியா' என்ற தலைப்பிலான இந்த தொலைநோக்கு திட்டம் சுய சார்பை உறுதிப்படுத்தும் என்றார்.
சிறு, குறு நிறுவனங்களுக்கான சலுகைகள் ஆகியவற்றுக்கான அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, நேற்று நிர்மலா சீதாராமன் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். இந்த 2ம் கட்ட சந்திப்பில் அவர் புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள், சிறு வியாபாரிகள், சாலையோர வியாபாரிகளுக்கான சலுகை திட்டங்களையும் அறிவித்தார்.
இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் செய்தியாளர்களை சந்தித்து புதிய அறிவிப்புகளை வெளியிட்டு பேசினார். அவர் கூறியதாவது:
விவசாயம், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகளுக்கான 11 வகை திட்டங்கள் இன்று அறிவிக்கப்படுகின்றன. அவற்றில் 8 உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து சார்ந்ததாக இருக்கும். மீதமுள்ள 3 நடவடிக்கைகள், ஆளுகை மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பானவை.
பால் உற்பத்தியில் இந்தியா உலக அளவில் முன்னோடியான நாடாக உள்ளது. சுய சார்பு திட்டத்தின்கீழ், ஒவ்வொரு மாநிலத்தின் உள்ளூர் பொருளும் இலக்கு வைத்து உற்பத்தி பெருக்கப்படும். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும்.
கர்நாடகாவில் ராகி அதிகம் விளைகிறது, வடகிழக்கு மாநிலங்களில் மூங்கில், பழங்கள், தெலுங்கானாவில் மஞ்சள், ஆந்திராவில் மிளகாய், காஷ்மீரில் குங்குமப்பூ, தமிழகத்தில் மரவள்ளி கிழங்கு உள்ளிட்ட ஒவ்வொரு மாநிலங்களிலும் ஒவ்வொரு வகையான விளைபயிர்கள் புகழ் பெற்றவை. இவற்றை கிளஸ்டராக மாற்ற, ரூ.10 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்தந்த கிளஸ்டர் பகுதிகள் மேம்படுத்தப்படும்.
பெண்கள், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோர் இதில் முக்கியத்துவம் பெறுவார்கள். கொள்முதல் நிலையங்கள் மற்றும் குளிர்பதன கிடங்குகள் ஒரு லட்சம் கோடியில் மேம்படுத்தப்படுகிறது. மீன்வளத்துறை மேம்படுத்துவதற்காக 20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். விவசாயத்துறை கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அவர் அறிவித்தார்.