சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும்.. பல சவாலுக்கு தயாராக வேண்டும்.. நிர்மலா சீதாராமன் அழைப்பு!
டெல்லி: பொருளாதார சிறப்பு தொகுப்பு திட்டம் குறித்து நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 4ஆவது முறையாக தற்போது செய்தியாளர்களை சந்தித்து விளக்கி வருகிறார். இதில், சுயசார்பு இந்தியாவை உருவாக்க வேண்டும், நாம் பல சவாலுக்கு தயாராக வேண்டும் என்று நிர்மலா சீதாராமன் அழைப்பு விடுத்துள்ளார்.
கொரோனா நோயால் பொருளாதார நெருக்கடியில் இருந்து இந்தியாவை மீட்கும் வகையில் ரூ 20 லட்சம் கோடி சிறப்பு தொகுப்பு அமல்படுத்தப்படும் என பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றிய போது தெரிவித்தார்.
இந்த திட்டம் குறித்து கடந்த 3 தினங்களாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்து வருகிறார். அந்த வகையில் முதல் நாளில் சிறுகுறு தொழிலாளர்களுக்காகவும், இரண்டாவது நாளன்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காகவும் மூன்றாவது நாளான நேற்று விவசாயிகளுக்காகவும் சில அறிவிப்புகளை வெளியிட்டார்.
இதைத் தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை இன்று தற்போது மீண்டும் சந்தித்தார். இன்று கட்டமைப்பு துறைக்கு திட்டங்களை அறிவிப்பதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
Recommended Video
நிர்மலா சீதாராமன் தனது பேச்சில், பிரதமர் கூறிய ''சுயசார்பு இந்தியா'' சவாலுக்கு நாம் தயாராக வேண்டும். சிறப்பு நிதித்திட்டம் இந்தியாவை வலிமைப்படுத்துமே தவிர தனிமைப்படுத்தாது. உலக அளவில் நாம் முன்னோடியாக மாற இதுதான் சரியான தருணம். வளரும் நாடுகளின் போட்டியை சமாளித்து சுயசார்பு இந்தியாவை உருவாக்க மத்திய அரசு பாடுபடுகிறது.
நாட்டில் தொழில்துறை வளர்ச்சி பெற கொள்கை சீர்திருத்தங்கள் தேவை என்ற நிலையில் இருக்கிறோம். நிறைய துறைகளில் விதிமுறைகள், பங்களிப்புகள் எளிமையாக இருக்க வேண்டும் என விரும்புகின்றன. அதற்கான அறிவிப்புகள் இன்று வரும். இந்தியாவின் வளர்ச்சியே நமக்கு முக்கியம். தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் வகுத்திருக்கும் திட்டத்தின் அடிப்படை என்பதை நாம் உணர வேண்டும்.
கடந்த சில ஆண்டுகளாக வலிமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்துள்ளார் பிரதமர். பொருளாதாரத்தை மேம்படுத்த அமைப்பு ரீதியான சீர்திருத்தங்கள் ஏற்படுத்தப்படும். நாட்டின் பல்வேறு துறைகளில் கொள்கை ரீதியாக மாற்றங்கள் தேவைப்படுகிறது. முதலீடுகளுக்கு விரைவாக அனுமதி அளிக்க துறைச் செயலாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.