அயோத்தி வழக்கு.. ஆவணங்கள் திருடு போய்விட்டது.. உச்ச நீதிமன்றத்தில் நிர்மோஹி அகாரா பரபரப்பு பதில்
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கொண்டாடும் நிர்மோஹி அகாரா அமைப்பு அதற்கு உரிய ஆவணங்கள் திருடு போய்விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
டெல்லி: அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கொண்டாடும் நிர்மோஹி அகாரா அமைப்பு அதற்கு உரிய ஆவணங்கள் திருடு போய்விட்டதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
1992ல் பாபர் மசூதி ஆர்எஸ்எஸ் கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்து பிடிக்கப்பட்ட இடமான 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்த சர்ச்சைக்குரிய 2 .77 ஏக்கர் நிலத்தை மனுதாரர்கள் பிரித்துக் கொள்ள வேண்டும் என்று அலஹாபாத் நீதிமன்றம் கூறியது. இதை எதிர்த்து சன்னி வக்பு வாரியம், நிரோகி அகாரா மற்றும் ராம் லல்லா ஆகிய 3 பிரிவினரும் உச்ச நீதிமன்றம் சென்றதால் வழக்கு நடந்து வருகிறது.
விசாரணை
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் நீதிபதிகள் டி.ஒய் சந்திரசூட், அப்துல் நசீர், அசோக் பூஷன், போப்டி ஆகியோர் இந்த வழக்கை விசாரித்து வருகிறார்கள். இந்த வழக்கு மீதான சமரச பேச்சுவார்த்தை தோல்வி அடைந்த நிலையில் வழக்கு தினமும் விசாரிக்கப்படுகிறது. இன்று இரண்டாவது நாளாக வழக்கு விசாரிக்கப்படுகிறது.
அமைப்பு
இந்த வழக்கில் தற்போது இந்து அமைப்புகளில் ஒன்றான நிர்மோஹி அகாரா வாதம் செய்து வருகிறது. நேற்று இந்த வழக்கில் நிர்மோஹி அகாரா சார்பாக வாதம் செய்த வழக்கறிஞர், சுஷில் குமார் ஜெய்ன், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் இருக்கும் பகுதியை பல நூறு வருடங்களாக நிர்மோஹி அகாராதான் நிர்வகித்து வந்தது.
100 வருடம்
நிர்மோஹி அகாராதான் அந்த நிலத்திற்கு அதிகாரம் கொண்டது. நிலத்தை சுற்றி இருக்கும் மற்ற சில இடங்களையும் நிர்மோஹி அகாராதான் நிர்வகித்து வந்தது. அதே சமயம் அங்கு இருக்கும் எந்த பகுதிக்கும் கடந்த 100 வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமியர்கள், இஸ்லாமிய அமைப்புகள் எதுவும் செல்லவில்லை என்று நிர்மோஹி அகாரா சார்பாக சுஷில் குமார் ஜெய்ன் குறிப்பிட்டார்.
என்ன வாதம்
இன்று வாதத்தை மீண்டும் தொடங்கிய போதும் சுஷில் குமார் ஜெய்ன் அதே வாதத்தை வைத்தார். இந்த நிலையில் இது தொடர்பான ஆதாரங்கள் வேண்டும் என்று நீதிபதிகள் கேட்டனர். டாக்குமெண்ட் ஆதாரங்கள் இருந்தால் சமர்ப்பியுங்கள் என்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் கேட்டார். நீதிபதி சந்திரசூட்டும் இது தொடர்பான உண்மையான ஆதாரங்கள் வேண்டும் என்று கேட்டார்.
காணவில்லை
இதற்கு நிர்மோஹி அகாரா அமைப்பு, ஆதாரங்கள் எதுவும் இல்லை. ஆனால் அலஹாபாத் நீதிமன்றத்தில் சில ஆவணங்களை தாக்கல் செய்து இருக்கிறோம். அதை வைத்துதான் அங்கு தீர்ப்பு வழங்கினார்கள். வேறு ஆதாரங்கள் எங்களிடம் இல்லை. ஆதாரங்கள் எல்லாம் 1982ல் திருடு போய்விட்டது. அதனால் நிலத்திற்கு சொந்தம் கொண்டாடுவதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியாது என்று கூறியுள்ளது.
உரிமை இல்லை
இந்த நிலையில் நிர்மோஹி அகாரா நிலத்திற்கு உரிமை கொண்டாடும் ஆவணங்கள் எதையும் வைத்து இருக்கவில்லை என்பதால் வழக்கில் பெரிய திருப்பம் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறுகிறது. வழக்கு விசாரணை தொடர்ந்து தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.