சரவெடியை கொளுத்தி.. மத்தாப்பை கம்பு போல் சுற்றி.. ஜங்கு ஜக்காவை சொய்யினு சுத்தி.. நித்தியின் தீபாவளி
டெல்லி: கைலாசாவில் நித்யானந்தா தனது சிஷ்யர்களுடன் ஆனந்தமாக தீபாவளி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது. சிறு பிள்ளை போல் பட்டாசுகளை வெடித்து மகிழும் காட்சிகளை நெட்டிசன்கள் கலாய்த்து வருகிறார்கள்.
Recommended Video
நித்யானந்தாவால் உருவாக்கப்பட்டதாக சொல்லப்படும் கைலாசா எனும் நாடானது மற்ற நாடுகளை காட்டிலும் அண்மைக்காலமாக மிகவும் பிரபலமடைந்து வருகிறது. இந்த நாட்டில் துணிக் கடை, நகைக் கடை திறக்கவெல்லாம் அப்ளிகேஷன்கள் நித்தியிடம் குவிந்தன.
அவை அனைத்தையும் தாயுள்ளதோடு பரிசீலனை செய்த நித்தி, யார் வேண்டுமானாலும் தன் நாட்டில் தொழில் தொடங்கலாம் என்றும் ஆனால் காஞ்சிபுரம், திருவண்ணாமலை, மதுரை மாவட்ட மக்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்றும் அவர் சலுகைகளை அளித்தார்.
கரென்சி
300 பக்க பொருளாதார கொள்கைகள், கரென்சிகளையும் அறிமுகம் செய்து வைத்த நித்யானந்தா, தான் கைலாசாவில் தனிமைப்படுத்திக் கொண்ட போது சிரித்த இந்த உலகம், தற்போது கொரோனாவால் தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுவிட்டதாக நித்யானந்தா மார்தட்டி கொண்டார்.
சிரிச்சி சிரிச்சி
இந்த நிலையில் தனது சிஷ்யர்களுடன் சிரிச்சி சிரிச்சி பொழுதை கழிக்கும் அவர் அண்மையில் தீபாவளி பண்டிகையை ஆனந்தமாக கொண்டாடியுள்ளார். பார்ப்பதற்கு சிறு பிள்ளை போல் முகத்தில் அத்தனை மகிழ்ச்சி. கம்பி மத்தாப்பை தீபத்திருவிழாவுக்கு சுற்றும் மாவளி போல கம்பு சுத்துவது போல சர்சரென சுழற்றினார்.
ஆரவாரம்
இதை அங்கிருந்த சிஷ்ய கோடிகள் கைதட்டி ஆரவாரம் செய்தனர். இது தொடர்பாக வீடியோ ஒன்றும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் பேக்கிரவுண்ட் மியூசிக்குடன் தீபாவளி கொண்டாட்டம் களைக் கட்டுகிறது. பின்னர் தனது சிஷ்யர்கள் புடைச்சூழ சென்று சரவெடியை வத்திக்குச்சியால் கொளுத்தி போட்டுவிட்டு அப்படியே அசால்ட்டாக ஓடி வந்தார்.
குட்டி சிவகாசி
பின்னர் சங்கு சக்கரம், பூந்தொட்டி, விதவிதமான பட்டாசுகளை வெடித்தார். அவருடன் சேர்ந்து சிஷ்யர்களும் பட்டாசுகளை வெடித்தனர். அவர் வெடித்தது எந்த நாட்டு பட்டாசு என தெரியவில்லை. ஒரு வேளை குட்டி சிவகாசியை நித்தி ஆரம்பிச்சிருப்பாரோ என்னவோ தெரியவில்லை. அது போல் அவர் பட்டாசு வெடித்த இடமும் வெளிநாடு போல தெரியவில்லை. ஏதோ கிராமம் போல் காட்சியளிக்கிறது.