காஷ்மீரில் ஆபாச படங்கள் பார்க்கத்தானே இண்டர்நெட்.. நிதி ஆயோக் உறுப்பினரின் சர்ச்சை பேச்சு
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் இணைய சேவைகள் துண்டிக்கப்பட்டதை நியாயப்படுத்தி நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த 370வது பிரிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு இணைய சேவை, செல்போன் சேவை அனைத்தும் துண்டிக்கப்பட்டன.
தற்போது சுமார் 5 மாதங்களுக்குப் பின்னர் இந்த சேவைகள் மீண்டும் வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காஷ்மீர் இணைய சேவை துண்டிப்பு குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.சரஸ்வத் தெரிவித்த கருத்து:
ஜம்மு காஷ்மீரில் 5 மாதங்களுக்கு முன்னர் 370வது பிரிவு நீக்கப்பட்ட போது இணையசேவைகள் துண்டிக்கப்பட்டன. இதனால் நாட்டின் பொருளாதாரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஏனெனில் ஜம்மு காஷ்மீரில் இணைய சேவைகளை ஆபாச படங்களைப் பார்க்கதான் பயன்படுத்துகின்றனர். ஜம்மு காஷ்மீருக்கு செல்ல வேண்டும் என ஏன் அரசியல்வாதிகள் விரும்புகின்றனர்?
அரசியல்வாதிகளைப் பொறுத்தவரையில் டெல்லி வீதிகளில் என்ன நடக்கிறதோ அதேபோல் காஷ்மீரிலும் நடத்தப்பட வேண்டும் என விரும்புகின்றனர். இதற்காக சமூக வலைதளங்கள் மூலம் போராட்டங்களை தூண்டுகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டதால் என்ன மாதிரியான தாக்கம் ஏற்பட்டுவிட்டது? எந்த மாற்றமும் நிகழவில்லை. இவ்வாறு வி.கே. சரஸ்வத் கூறியுள்ளார்.
சரஸ்வத் விளக்கம்
சரஸ்வத்தின் இந்த கருத்து பெரும் சர்ச்சையாக வெடித்ததது. இதனைத் தொடர்ந்து விளக்கம் அளித்த சரஸ்வத், தாம் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுவிட்டது. காஷ்மீர் மக்களின் உணர்வுகளை என் கருத்து காயப்படுத்தியிருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.