மக்கள் தொகைக்கு சமமாக 3 ஆண்டுகளில் 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும்.. மத்தியமைச்சர் நிதின் கட்கரி
டெல்லி: நாட்டின் மக்கள் தொகைக்கு சமமாக அடுத்து வரும் மூன்று ஆண்டுகளில், 125 கோடி மரக்கன்றுகள் நடப்படும் என மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி உறுதி தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் நாக்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட நிதின் கட்கரி, 6,60,221 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரான நானா படோல், 4,44,212 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார். இந்நிலையில் மோடியின் அரசில் மத்திய அமைச்சராக மீணடும் பொறுப்பேற்றுள்ளார் நிதின் கட்கரி.
முந்தைய மோடி அரசில் நெடுஞ்சாலை போக்குவரத்து துறை அமைச்சராக பொறுப்பு வகித்த நிதின் கட்கரிக்கு, மீண்டும் அதே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும் நிதின் கட்கரிக்கு கூடுதலாக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமது துறையின் வருங்கால திட்டங்கள் குறித்து தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு நிதின் கட்கரி பேட்டியளித்தார். அப்போது பேசியுள்ள அவர், நாடு முழுவதும் தற்போது நாளொன்றுக்கு 32 கிலோ மீட்டர் சாலை பணிகள் நடைபெற்றுவருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனை அதிகப்படுத்தி தினமும் 40 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டம் தீட்டியிருப்பதாக கூறினார்.
மேலும் பேசிய அவர் தற்போது நிலுவையில் உள்ள நெடுஞ்சாலை திட்டங்கள் அனைத்தையும் அடுத்து வரும் மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்றி முடிக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என்றார்.
வரும் மூன்று ஆண்டுகளில் சாலையோரங்களில் நம் நாட்டின் மக்கள் தொகைக்கு ஈடாக, சுமார் 125 கோடி மரக்கன்றுகளை நட தீர்மானித்திருப்பதாகவும் நிதின் கட்கரி குறிப்பிட்டுள்ளார்.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளானது வளர்ச்சி விகிதம் மற்றும் வேலைவாய்ப்புகளுடன் நேரடி தொடர்பை கொண்டுள்ளது. எனவே சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறைகளின் வளர்ச்சி விகித்தில், அதிக அக்கறை செலுத்த வேண்டும் என பிரதமர் மோடி விரும்புகிறார்.
சிறு, குறு தொழில் துறை நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. பிரதமர் மோடியின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற தாம் முழு மூச்சாக பாடுபட உள்ளதாக கூறியுள்ளார். இதற்காக ஓய்வை குறைத்து கொண்டு மிக கடுமையாக பணியாற்றப் போவதாகவும் கட்கரி தனது பேட்டியின் போது கூறினார்.
சாலைப் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க சில முக்கிய பணிகளை முடிக்கப்பட்டுள்ளது. இதே போல நாடு முழுவதும் நிலவும் தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க நதிநீர் இணைப்புக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் செய்யும் என்றார்.