புதிய மோட்டார் வாகன சட்டம்.. மாநில அரசே முடிவெடுக்கலாம்.. இறங்கி வந்த நிதின் கட்கரி!
புதிய மோட்டார் வாகன சட்டம் மூலம் எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
டெல்லி: புதிய மோட்டார் வாகன சட்டம் மூலம் எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் என்பது குறித்து மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
புதிய மோட்டார் வாகனச்சட்டம் மக்கள் இடையே பெரிய எதிர்ப்பை சந்தித்து உள்ளது. மோட்டார் வாகனச்சட்டம் மூலம் அதிக அளவு அபராதம் விதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இது தொடர்பாக தினமும் அதிர்ச்சி அளிக்க கூடிய செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது.
இந்த நிலையில் மோட்டார் வாகனச்சட்டம் குறித்து மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி பேட்டி அளித்துள்ளார். அதில், மோட்டார் வாகனச்சட்டம் வருவாய்க்காக கொண்டு வரப்பட்டது அல்ல, மக்களின் உயிரைக் காப்பதற்காக கொண்டுவரப்பட்டது. சிலர் அபராதம் போடுவதற்கும், அபராதம் கட்டுவதற்கும் வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
வன்புணர்வு வழக்குகளுக்கு ஏன் தூக்கு தண்டனை அளிக்கப்பட்டு வருகிறது. சட்டம் மீது பயம் இருக்க வேண்டும் என்பதற்காக அப்படி சட்டம் கொண்டு வந்துள்ளனர். அப்படித்தான் இந்த சட்டமும்.
உயிரை விட பணம் முக்கியமா? சட்டங்கள் கடுமையாக இருக்க வேண்டும். சட்டத்தின் மீது பயத்தையும், மரியாதையையும் உருவாக்கவே மோட்டார் வாகன சட்டத்தை அமல்படுத்துகிறோம்
போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம். எவ்வளவு அபராதம் விதிக்க வேண்டும் உள்ளிட்ட மாற்றங்களை மாநில அரசே முடிவு செய்து கொள்ளலாம். இது தொடர்பாக நான் மாநில முதல்வர்களுடன் பேச போகிறேன்.
இந்த சட்டத்தை கடைபிடிக்க மாநில அரசின் ஒத்துழைப்பும் வேண்டும். கனடா, கலிபோர்னியா, லண்டனில் எல்லாம் மிக கடுமையாக விதிகள் இருக்கிறது. அதை பார்த்து, படித்துதான் இந்த சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
சாலை விபத்துகளால் வருடம் முழுக்க பல லட்சம் மக்கள் உயிர் இழக்கிறார்கள். நாம் இப்போது உயிர்களை பற்றி பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. நாம் இனியும் அபராதம் குறித்து பேச கூடாது, என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.