ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை- நிதின் கட்கரி
டெல்லி: ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா என்ற இடத்தில் 70-க்கும் மேற்பட்ட வாகனங்களில் 2500 சிஆர்பிஎஃப் வீரர்கள் சென்று கொண்டிருந்தனர். அப்போது 350 கிலோ வெடிப்பொருள்களுடன் வந்த தற்கொலை படை தாக்குதல் நடத்தினார்.
இதில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணமடைந்தனர். இந்த சம்பவத்தால் இந்தியாவே கடும் கொந்தளிப்பில் உள்ளது. இந்த சம்பவத்துக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என பாகிஸ்தான் கூறி வருகிறது.
புல்வாமா தாக்குதல் எதிரொலியாக ராவி நதியிலிருந்து பாகிஸ்தான் செல்லும் இந்தியாவின் உபரிநீரை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்திய நதிகளான ராவி, பியாஸ், சட்லஜ் ஆகிய நதிகளில் இருந்து பாகிஸ்தானுக்கு பாயும் உபரி நீரை இந்தியாவே முழுவதும் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்துள்ளது.
இந்தியாவின் உபரிநீரை திசை திருப்ப ஷாஷ்பூர்-காண்டி பகுதியில் ராவி நதியில் அணை கட்டும் பணி நடக்கிறது. ராவி நதி உபரிநீரை திசை திருப்பி ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப் மாநிலங்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்கப்படும். உபரி நீரை நிறுத்தும் இந்தியாவின் முடிவால் இந்தியா, பாகிஸ்தான் இடையே சிந்து நதி நீர் பங்கீட்டு உடன்படிக்கையை எந்தவிதத்திலும் பாதிக்காது என்றார் அவர்.