அமித் ஷா விருந்தில் மோடியை விட அதிக கவனம் பெற்ற நிதின் கட்கரி.. கொண்டாடிய கூட்டணி கட்சிகள்!
டெல்லி: டெல்லியில் பாஜக தேசிய தலைவர் அமித் ஷா வழங்கிய விருந்தில் மத்திய பாஜக அமைச்சர் நிதின் கட்கரி அதிக கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில், மத்திய பாஜக அமைச்சர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லி பாஜக அலுவலகத்தில் இந்த ஆலோசனை நடக்கிறது. பாஜக தேசிய தலைவர் அமித் ஷா ஆலோசனைக்கு தலைமை தாங்குகிறார்.
இதில் அமித் ஷா தலைமையில் பாஜக கூட்டணி கட்சித் தலைவர்களுக்கு டெல்லியில் விருந்தும் வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .
ஏன் விருந்து
லோக்சபா தேர்தலில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதாக செய்திகள் வருவதால் இந்த விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது. பாஜக கட்சி இந்த முறை கூட்டணி கட்சிகளின் உதவியுடன் ஆட்சி அமைக்க வாய்ப்புள்ளதாக செய்திகள் வருகிறது. இதனால் கூட்டணி கட்சிகளை ஒருங்கிணைக்கும் விதமாக இந்த விருந்து நடப்பதாக கூறுகிறார்கள்.
யார் எல்லாம் கலந்து கொண்டது
டெல்லியில் உள்ள அசோகா ஓட்டலில் இந்த விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில், பீகார் முதல்வர் நிதீஷ் குமார், பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி, அன்புமணி ராமதாஸ், பிரேமலதா விஜயகாந்த், வாசன், சரத்குமார், ஏ.சி.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அதிக கவனம்
இந்த விருந்தில் மோடியை விட பாஜக அமைச்சர் நிதின் கட்கரிதான் அதிக கவனத்திற்கு உள்ளானார். மிகவும் பொலிவாக வந்து இருந்த நிதின் கட்கரியை எல்லா தலைவர்களும் தேடி சென்று வரவேற்றனர். தமிழக முதல்வரும் இவரிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தார். பாஜக கூட்டணி தலைவர்கள் நிதின் கட்கரிக்குத்தான் அதிக முக்கியத்துவம் கொடுத்தனர். விருந்து முழுக்க நிதின் கட்கரிதான் அதிக கவனம் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு பதில்
ஏற்கனவே பாஜகவில் மோடிக்கு பதில் நிதின் கட்கரி முன்னிறுத்தப்படுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் தற்போது பாஜக கூட்டத்தில் கட்கரி இப்படி கவனம் ஈர்த்து இருப்பது பல கேள்விகளை எழுப்பி உள்ளது. இதனால் தேர்தலுக்கு பின் மோடிக்கு பதில் நிதின் கட்கரிக்கு பிரதமர் ஆக வாய்ப்பு வழங்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது.