பாஜகவுக்கு ‛செக்’.. சோனியாவுடன் நிதிஷ், லாலு பிரசாத் சந்திப்பு.. எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க ஆலோசனை
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவரான சோனியா காந்தியை பீகார் முதல்வர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாத்வ் ஆகியோர் டெல்லியில் சந்தித்து பேசினர். இந்த சந்திப்பின்போது அவர்கள் 2024 நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாகவும், பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டுவது பற்றியும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
இந்தியாவில் 2024ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலை எதிர்கொள்ள பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட தேசிய கட்சிகள் தயாராகி வருகின்றன.
இதேபோல் ஒவ்வொரு மாநிலத்தில் உள்ள மாநில கட்சிகளும் நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அதற்கான பணிகளை செய்ய துவங்கியுள்ளன.
கண்டா வரச்சொல்லுங்க.. மத்திய அமைச்சர் நிர்மலா சீதாரானுக்கு கோரிக்கை வைத்த ஆனந்த் ஸ்ரீனிவாசன்!
பாஜகவுக்கு எதிராக அணி
குறிப்பாக மத்தியில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் ஆகியோர் பிரதமர் பதவி மீது கண்வைத்து காங்கிரஸ் இல்லாத 3வது அணி அமைக்க திட்டமிட்டு வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க காங்கிரஸ் கட்சியும் பாஜகவுக்கு எதிரான பலமான அணி அமைக்க முடிவு செய்து அதற்கான பணியை தொடங்கி உள்ளது.
பீகாரில் மாறிய ஆட்சி
இதற்கிடையே தான் பீகாரில் பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடந்தது. முதல்வராக ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் தலைவரான நிதிஷ் குமார் முதல்வராக இருந்தார். இந்த கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து பாஜக-ஐக்கிய ஜனதாதளம் கட்சியின் கூட்டணி ஆட்சி நிறைவுக்கு வந்தது. முதல்வர் பதவியை நிதிஷ் குமார் ராஜினாமா செய்தார். இருப்பினும் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகள் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதாதளம் கட்சியுடன் கைகோர்த்தன. இதையடுத்து ராஷ்ட்ரிய ஜனதாதளம்-ஐக்கிய ஜனதாதளம்-காங்கிரஸ் கட்சியின் கூட்டணி ஆட்சியில் மீண்டும் நிதிஷ் குமார் முதல் அமைச்சராக பொறுப்பேற்றார்.
பாஜகவுக்கு எதிராக வியூகம்
இதையடுத்து நிதிஷ் குமார், பாஜக தலைவர்கள் இடையே வார்த்தைப்போர் நீடித்து வருகிறது. அதோடு 2024 நாடாளுமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகள் சார்பில் பிரதமர் வேட்பாளராக போட்டியிடலாம் என கூறப்படுகிறது. இதனை நிதிஷ் குமார் தொடர்ந்து மறுத்து வருகிறார். இருப்பினும் அவர் பாஜகவுக்கு எதிரான நிலைப்பாடு கொண்ட எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்டி பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக வியூகம் வகுப்பதில் ஆர்வமாக செயல்பட்டு வருகிறார்.
மூன்று தலைவர்கள் சந்திப்பு
இதனால் தான் அவர் தொடர்ந்து பல்வேறு கட்சி தலைவர்களை சந்தித்து வருகிறார். அதன்படி இன்று காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை நிதிஷ் குமார் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் ஆகியோர் சந்தித்து பேச உள்ளதாக கூறப்பட்டது. அதன்படி அவர்கள் 2 பேரும் டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் வீட்டுக்கு இன்று மாலை சென்றனர். இவர்கள் 3 பேரும் 6 ஆண்டுகளுக்கு பிறகு நேரில் சந்தித்து கொண்டனர்.
ஆலோசித்தது என்ன?
இந்த வேளையில் பீகாரில் தன்னை முதல்வராக்க ஆதரவு அளித்ததற்கு சோனியா காந்திக்கு நிதிஷ் குமார் நன்றி தெரிவித்தார். மேலும் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ், சோனியா காந்தி ஆகியோர் பரஸ்பரம் உடல்நலம் குறித்து விசாரித்து கொண்டனர். அதோடு பீகார் அரசியல் நிலவரம் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் பாஜகவுக்கு எதிராக செயல்படுவது தொடர்பான வியூகம் பற்றி விவாதித்ததாக சொல்லப்படுகிறது. இதுதவிர 2024ம் ஆண்டில் பாஜகவுக்கான எதிரான கொள்கையில் உள்ள கட்சிகளை ஓரணியில் திரட்டுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து மூன்று பேரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
லாலு கட்சி அறிக்கை
முன்னதாக இந்த சந்திப்பு குறித்து லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதாதளம் கட்சி சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், ‛‛2024 நாடாளுமன்ற தேர்தலுக்காக எதிர்க்கட்சிகளை வலுப்படுத்துவது மட்டுமின்றி பல்வேறு காரணங்களுக்காகவும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது குறித்து சோனியா காந்தியிடம் விவாதிக்கப்படும். காங்கிரசில் இருந்து அரசியல் ரீதியாக சற்று தொலைவில் உள்ள மாநில கட்சிகளின் தலைவர்களையும் சந்தித்து கூட்டணியில் சேரும்படி அழைப்பு விடுக்கும் உரிமையை அளிக்க அனுமதி கோரப்படும். இந்த சந்திப்பு வெற்றி பெற்றால் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி விரைவுப்படுத்தப்படும்'' என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.