புதிய எம்.பி.க்களுக்கு 5 ஸ்டார் ஓட்டல் கிடையாது... சுமித்ரா மகாஜன் எடுத்த அதிரடி முடிவு!!
டெல்லி: புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் டெல்லியில் தங்குவதற்கு இனி 5 நட்சத்திர ஓட்டல் வசதி கிடையாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் முடிவுகள் வெளியாக துவங்கி இருக்கின்றன. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் கூறியது போலவே, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்த சூழலில், புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் இன்றிலிருந்தே டெல்லியில் முகாமிட துவங்குவர்.
பொதுவாக புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் எம்.பி.க்கள் தங்குவதற்காக 5 ஸ்டார் ஓட்டல்களில் தங்க வைக்கப்படுவது வழக்கம். 1980களிலிருந்து இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது. அவர்களுக்கான அரசு இல்லம் ஒதுக்கீடு செய்யப்படும் வரை நட்சத்திர ஓட்டல்களிலேயே தங்க வைக்கப்படுவர். ஆனால், இதனால் அரசுக்கு பெரிய அளவில் செலவு ஏற்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன.
கடந்த 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலின்போது, புதிய தேர்ந்தெடுக்கப்பட்ட 315 எம்.பி.க்கள் 5 நட்சத்திர ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டனர். இதற்காக அரசு பணம் ரூ.35 கோடி வரை செலவிடப்பட்டது. இதுகுறித்து கடும் விமர்சனங்கள் எழுந்தன. இந்த விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதத்தில் இனி புதிய எம்.பி.களுக்கு 5 ஸ்டார் ஓட்டல்களில் அறை வசதி செய்து தரப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறார் திருமாவளவன்.. அதிமுக முன்னிலை!
இதுதொடர்பாக மக்களவை செயலாளர் சினேகலதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், புதிய எம்.பி.களுக்கு ஓட்டல் அறையில் தங்க வைக்கப்பட மாட்டார்கள். இந்தமுறை வெஸ்டர்ன் கோர்ட் கட்டடம் மற்றும் புதிதாக கட்டப்பட்ட அதன் இணைப்பு கட்டடத்தில் அறைகள் ஒதுக்கப்பட்டு தங்க வைக்கப்படுவார்கள்.
மேலும், பல்வேறு மாநில பவன்களில் அவர்கள் தங்க வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது என்று தெரிவித்துள்ளார். புதிய எம்.பி.க்களை தங்க வைப்பதற்காக 350 அறைகள் தயார் செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் கொடுத்த அறிவுறையின்படி, இந்த முறை 5 நட்சத்தர ஓட்டல்களில் எம்.பி.க்கள் தங்க வைக்கப்படுவது தவிர்க்கப்பட இருக்கிறது. இந்த நடவடிக்கை மூலமாக அரசுக்கு ரூ.30 கோடி வரையிலான செலவு தவிர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.