அயோத்தி வழக்கின் அரசியல் சாசன அமர்வு விசாரணை ரத்து… காரணம் நீதிபதி இல்லை
டெல்லி:அயோத்தி நில விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனு மீது வரும் 29ம் தேதி நடைபெறுவதாக இருந்த அரசியல் சாசன அமர்வு விசாரணையை உச்ச நீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கில், அலாகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் 14 மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்களை விசாரிப்பதற்கு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, என்.வி. ரமணா, டி.ஒய். சந்திராசூட், யு.யு. லலித் ஆகியோரைக் கொண்ட அரசியல் சாசன அமர்வை உச்ச நீதிமன்றம் அமைத்தது.
மனுக்களை இந்த அமர்வு ஜனவரி 10-ஆம் தேதி விசாரிக்கும் என்று தெரிவித்திருந்தது. அதன்படி, உச்ச நீதிமன்றத்தில் 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன அமர்வு, அயோத்தி விவகாரம் தொடர்பான மேல்முறையீட்டு மனுக்களை இந்த மாதம்10ம் தேதி விசாரணைக்கு எடுத்து கொள்ள இருந்தது.
முஸ்லிம் சமூகம் மனு
ஆனால், அயோத்தி விவகாரத்தில் முஸ்லிம் சமூக மனுதாரரின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜீவ் தவன் என்பவர், அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பாக முதல்வர் கல்யாண் சிங் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக யு.யு. லலித் வாதாடியுள்ளார். அவர்தான் தற்போது 5 நீதிபதி கொண்ட அமர்வில் நீதிபதியாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
விலகிய லலித்
அதன் எதிரொலியாக, அமர்வில் இருந்து விலகுவதாக நீதிபதி யு.யு. லலித் அறிவித்தார். இதையடுத்து, புதிய அமர்வை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமைத்தார். அதில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையில் நீதிபதிகள் எஸ்.ஏ. பாப்டே, டி.ஒய்.சந்திராசூட், அசோக் பூஷண் மற்றும் எஸ்.ஏ. நசீர் ஆகியோர் இடம்பெற்றனர்.
ஜன.29ல் விசாரணை
முந்தைய அமர்வில் இருந்த நீதிபதி லலித் இடம் பெறவில்லை, மேலும், என்.வி. ரமணாவும் புதிய அமர்வில் இடம் பெறவில்லை. அதே சமயத்தில் வழக்கு விசாரணை வரும் 29ம் தேதி புதிய அமர்வில் நடைபெறும் என்று தலைமை நீதிபதி அறிவித்திருந்தார்.
வெளியானது சுற்றறிக்கை
இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தின் பதிவாளர் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:வரும் 29-ம் தேதி அயோத்தி நிலவிவகார மேல் முறையீட்டு வழக்கை விசாரிக்கும் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் இடம் பெற்றுள்ள நீதிபதி எஸ்.ஏ.பாப்டே அன்று வரஇயலாத நிலையில் உள்ளார்.
ரத்தான விசாரணை
எனவே அன்று நடைபெறும் விசாரணை ரத்து செய்யப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் புதிய தேதியில் எப்போது விசாரணை நடைபெறும் என்பது குறித்து அறிவிக்கப் படவில்லை.