தூத்துக்குடி துப்பாக்கி சூடு வழக்கை சிபிஐ விசாரிக்க தடை கிடையாது.. உச்ச நீதிமன்றம்
Recommended Video
டெல்லி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவத்தை சிபிஐ விசாரிக்க தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தினர். கடந்த மே மாதம் 22-ஆம் தேதி தூத்துக்குடியில் மக்கள் போராட்டத்தின் போது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 அப்பாவிகள் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது.
ஆனால் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த ஆகஸ்ட் 14ம் தேதி துப்பாக்கிச் சூடு வழக்கை சிபிஐக்கு மாற்றி உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. ஆனால், அதை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம். உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
அதில், தமிழக காவல் துறையே திறம்பட விசாரணை செய்வதால், இதில் சிபிஐ விசாரணை தேவையில்லை என்று மனுவில் கூறப்பட்டது. இந்த வழக்கு விசாரணை, இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, சிபிஐ விசாரணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததோடு, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க உத்தரவிட்டு உச்சநீதிமன்றம் வழக்கை ஒத்திவைத்தது.