மத்திய அரசு வேலைக்கான பணியிடங்களை நிரப்ப எந்த தடையும் இல்லை.. சர்ச்சை பற்றி நிதி அமைச்சகம் விளக்கம்
டெல்லி: மத்திய அரசு நிறுவனங்களில் பணியிடங்களை நிரப்ப எந்த விதமான தடையும் விதிக்கப்படவில்லை, புதிய பொறுப்புகளை உருவாக்க மட்டுமே கட்டுப்பாட்டு விதிக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
நேற்று மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டு இருந்த உத்தரவு ஒன்றில், நாடு முழுக்க மத்திய அரசு நிறுவனங்களில் செலவினங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு இருந்தது. அவசர திட்டங்கள் மற்றும் பொருளாதார தேவைகளுக்காக செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும்.
முக்கியமான திட்டங்களுக்கு செலவுகளை செய்ய வேண்டி உள்ளது. இதனால் மத்திய அரசு அலுவலகங்களில் செலவுகளை குறைக்க வேண்டும். புதியதாக பணி இடங்கள் எதையும் உருவாக்க கூடாது. மத்திய அரசின் அனுமதி இன்றி எந்த விதமான புதிய பணியிடங்களையும் உருவாக்க கூடாது என்று அரசு இதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தது.
மத்திய அரசின் இந்த அறிவிப்பு பெரிய விவாதங்களை ஏற்படுத்தியது. காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி பலர் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தனர். மத்திய பாஜக அரசு தனியாருக்கான அரசு போல செயல்படுகிறது. கொரோனாவை காரணம் காட்டி அரசு அலுவலகங்களை மூடி, இளைஞர்களின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது என்று ராகுல் காந்தி இது தொடர்பாக குறிப்பிட்டு இருந்தார்.
தொழில் தொடங்க ஏற்ற மாநிலங்களின் பட்டியல்.. முதலிடத்தில் ஆந்திரா.. தமிழகத்திற்கு எத்தனையாவது இடம்?
இந்த நிலையில் மத்திய நிதி அமைச்சகம் இதற்கு விளக்கம் அளித்துள்ளது. அதில், நேற்று மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு புதிய வேலை வாய்ப்பு மற்றும் பணியிட நிரப்புதலை தடுக்காது. எப்போதும் போல மத்திய அரசு பணிகளுக்கு ஆள் எடுக்கும் பணிகள் நடக்கும்.
அலுவலகங்களுக்கு உள்ளே புதிய பொறுப்புகளை உருவாக்க கூடாது. அதன் மூலமாக செலவுகளை அதிகரிக்க கூடாது என்று மட்டுமே அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறோம். பணியிடங்களை நிரப்ப தடை எதுவும் இல்லை. எப்போதும் போல யுபிஎஸ்சி, எஸ்எஸ்சி போன்ற தேர்வுகள் மூலம் பணியிடங்கள் தொடர்ந்து நிரப்பப்படும் என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.