வருமான வரி மாற்றியமைப்பு மாயவலையா? மாதச் சம்பளம் வாங்குவோருக்கு உண்மையிலேயே பலன் கிடையாதா?
Recommended Video
டெல்லி: இடைக்கால பட்ஜெட்டில் நிதி அமைச்சர் (பொறுப்பு) பியூஷ் கோயல் அறிவித்த வருமான வரி விலக்கு உச்சவரம்பு மாறுபாடு தொடர்பாக பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளன.
நடப்பு நிதியாண்டில், உள்ள கணக்கீடுப்படி 2.5 லட்சம் வரையிலான தனி நபர் வருவாய்க்கு வருமான வரி கிடையாது. ஆனால், 2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையிலான வருவாய்க்கு 5 சதவீதமும், 10 - 20 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 20 சதவீதமும், அதற்கு மேல் 30 சதவீதமும் வருமான வரியாக வசூலிக்கப்படுகிறது.
ஆனால் நேற்று 2019-20ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தபோது, 5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு வருமான வரி கிடையாது என அறிவித்தார்.
பெரும் ஆரவாரம்
பியூஷ் கோயலின் இந்த அறிவிப்பையடுத்து, பாஜக உறுப்பினர்கள் மேஜையை தட்டி பெரும் ஆரவாரம் செய்தனர். மோடி.. மோடி.. என்றெல்லாம் கோஷங்களும் எழுந்தன. இந்த அறிவிப்பால் 3 கோடி பேருக்கு பலன் கிடைக்கும் என்றும் பியூஷ் கோயல் அப்போது அறிவித்தார். மாத ஊதியதாரர்களுக்கு பெரும் பலனை தரக்கூடிய திட்டம் இது என பாஜகவினரால் புகழப்பட்டு வருகிறது.
தெளிவு இல்லையே
அதேநேரம், இந்த அறிவிப்பால், முழு பலனையும் சம்பளதாரர்கள் பெற முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனெனில் பியூஷ் கோயல் அறிவிப்பில் முழு தெளிவு இல்லை. 5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருவாய் பெறும், ஊதியதாரர்களுக்கு, இதனால் பெரிய பலன் கிடைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
அடுத்த நிதியாண்டு
பியூஷ் கோயல் அறிவிப்பில் நிலையான கழிவு என்பது இப்போதுள்ள 40,000 என்பதில் இருந்து 50,000மாக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது எல்லா வருவாய் பிரிவினருக்கும் பொதுவானது என்றபோதிலும், 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல்தான் அமலுக்கு வருகிறதே தவிர, இவ்வாண்டு ஏப்ரல் முதல் கிடையாது என்கிறது நிதித்துறை வட்டாரம். எனவே, சம்பளதாரர்களுக்கு இவ்வாண்டில் பலன் கிடைக்காதாம்.
கணிசமானோருக்கு பலன் இல்லையே
5 லட்சம் ரூபாய்க்கு மேலான தனி நபர் வருவாய்க்கான வரி விகிதத்தில் மாற்றமில்லை. எனவே, அவர்கள் பழையமாதிரி, தங்கள் வருவாய்க்கு 20 சதவீத வரி செலுத்த வேண்டிவரும். எனவே 5 லட்சத்துக்கும் குறைவான வருவாய் பிரிவினருக்கு மட்டுமே இது வரப்பிரசாத பட்ஜெட்டாகும். ஆனால் கணிசமான நடுத்தரவர்க்கத்தினர் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட வருவாய் பிரிவினராக இருப்பதால் இதை நடுத்தர வர்க்கத்தத்தினர் அனைவருக்கும் பலன் தரும் பட்ஜெட் என கூறிவிட முடியாது என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.