மோடியை யாராலும் ஜெயிக்க முடியாது..!! பாஜக கூட்டத்தில் 1 மணி நேரம் முழங்கிய அமித் ஷா!
டெல்லி:எந்த தேர்தலிலும் பாஜகவையோ, பிரதமர் மோடியையோ ஒருபோதும் வெல்ல முடியாது என்று பாஜக தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
பாஜக தேசிய கவுன்சில் கூட்டம் டெல்லியில் தொடங்கி உள்ளது. தேசிய கவுன்சில் குழுக் கூட்டத்தில் விவசாயிகள் நலத்திட்டங்கள், ஏழைகள் நலத் திட்டங்கள் குறித்தும், நாட்டின் பொருளாதா வளர்ச்சிக்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் ஆலோசனை நடத்தப்படுகிறது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கூட்டத்தை பாஜக தலைவர் அமித் ஷா தொடங்கி வைத்து பேசியதாவது:வரும் லோக் சபா தேர்தலில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, எதிர்க் கட்சிகள் ஓரணியாகத் திரண்டு வருகின்றன. அந்த அணியில் உள்ள எந்தவொரு தலைவருக்கும் கொள்கையும் கிடையாது; அவர்களிடம் வளர்ச்சித் திட்டமும் கிடையாது.
அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் என்ற வெறியே அவர்களிடம் உள்ளது. உலக அளவில் மிகவும் பிரபலமான தலைவரான பிரதமர் மோடியை பாஜக பெற்றுள்ளது. அவரது தலைமையிலான மத்திய அரசு, நாட்டின் பாதுகாப்பு, ஊழல் ஒழிப்பு, மக்கள் நலத் திட்டங்கள் என பல்வேறு திட்டங்களை வெற்றி கரமாக செயல்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடியைத் தவிர வேறு யாராலும் மத்தியில் வலிமையான ஆட்சியை தர முடியாது.எனவே மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால்தான், நாட்டின் வளர்ச்சியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும்.
பிரதமர் மோடியை எந்தக் கூட்டணியாலும் வெல்ல முடியாது.
அவர், இந்திய அரசியலின் தவிர்க்க முடியாத சக்தி என்பதை எதிர்க்கட்சிகள் அறிந்து வைத்துள்ளன. பிரதமர் மோடிக்கு மக்கள் உறுதியோடு தொடர்ந்து ஆதரவு அளித்து வருகின்றனர். எனவே, வரும் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியமைப்பது உறுதியாகி விட்டது.
பிரதமர் மோடியை 1987-ஆம் ஆண்டில் இருந்து எனக்குத் தெரியும். அவரது தலைமையில் நடைபெற்ற எந்தவொரு தேர்தலும் தோல்வியைத் தழுவியது கிடையாது. 2014ம் ஆண்டில் கிடைத்த தொகுதிகளைக் காட்டிலும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று பேசினார்.