எவ்வளவு பெரிய வேலை பார்த்திருக்காங்க ஸ்மிருதி.. அவங்கள இப்படி டம்மியாக்கிட்டாங்களே!
Recommended Video
டெல்லி: மத்திய அமைச்சரவையில் ஸ்மிரிதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு துறை, ஜவுளித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற விழாவில் புதிய அரசு ஆட்சிப் பொறுப்பேற்றது. பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.
அவரைத் தொடர்ந்து 57 அமைச்சர்கள் நேற்று பொறுப்பேற்றனர். இதில் பல புது முகங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அமைச்சர்களின் இலாகாக்கள் இன்று அறிவிக்கப்பட்டன.
அதன்படி மோடியின் வலது கரம் என்று கூறப்படும் அமித்ஷாவுக்கு மோடி அமைச்சரவையில் மூன்றாவது இடம் கொடுக்கப்பட்டுள்ளது. அதாவது உள்துறை அமைச்சகம் அமித்ஷாவுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அமித்ஷாவுக்கு உள்துறை, ராஜ்நாத் சிங்கிற்கு பாதுகாப்பு, நிர்மலாவுக்கு நிதித்துறை ஒதுக்கீடு
ஸ்மிரிதி இரானி
இந்நிலையில் அமேதி தொகுதியில் ராகுல்காந்தியை வீழ்த்தி சாதனை படைத்த ஸ்மிரிதி இரானிக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை வழங்கப்பட்டுள்ளது. எந்த சவாலும் இல்லாத சாதாரண துறைதான் இது.
சூறாவளியாய் சுழன்று
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் காங்கிரஸின் கோட்டை என கூறப்படும் அமேதியில் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் ராகுல்காந்தியை எதிர்த்து போட்டியிட்டார் ஸ்மிரிதி இரானி. காங்கிரஸ் கோட்டை என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி சூறாவளியாய் சுழன்று பிரச்சாரம் செய்தார் ஸ்மிரிதி.
தகர்க்கப்பட்ட காங். கோட்டை
அதற்கான பலனும் கிடைத்தது. ஆம் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அமேதி தொகுதியில் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அமோக வெற்றி பெற்றார் ஸ்மிரிதி இரானி. அமேதியில் பெற்ற வெற்றியின் மூலம் காங்கிரஸ் கோட்டையை மட்டுமின்றி ராகுலின் கனவையும் சுக்கு நூறாக தகர்த்தார்.
சவாலான துறை
கடந்த 2014ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராகுலிடம் வீழ்ந்த ஸ்மிரிதி இம்முறை வீறுகொண்டு வெற்றியை பறித்தார். இதனால் ஸ்மிரிதிக்கு முதல் நான்கு துறைகளில் ஒன்று அல்லது வலுவான ஒரு துறை அவருக்கு சவாலாக வழங்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்தனர்.
முக்கியத்துறை
அதற்கேற்றார் போல் நிதித்துறை அமைச்சராக இருந்த அருண்ஜேட்லி உடல்நலக்குறைவு காரணமாக அமைச்சர் பதவி வேண்டாம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். இதனால் முக்கிய துறையில் ஸ்மிரிதிக்கான வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக எதிர்பார்க்கப்பட்டது.
பெண்கள் மற்றும் குழந்தைகள்
ஆனால் ஸ்மிரிதி இரானிக்கு பத்தோடு பதினொன்றாக பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறையே வழங்கப்பட்டுள்ளது. கடந்த முறை இத்துறை மேனகா காந்தியின் வசம் இருந்தது.
இங்கேயும் சாதிப்பாரா?
இந்நிலையில் இந்த துறையை ஸ்மிரிதி இரானிக்கு கொடுத்துள்ளது மோடி அரசு. மிக சாதாரண துறைதான் என்றாலும் நாளுக்கு நாள் நாட்டில் அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை சவாலாக எடுத்து இங்கேயும் சாதிப்பாரா ஸ்மிரிதி..?