6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை- மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
டெல்லி: 6 மாதத்திற்கான கடன்களுக்கு வட்டிக்கு வட்டி என்பது தள்ளுபடி செய்யப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. வங்கிகள், நிதிநிறுவனங்களில் ரூ 2 கோடிக்கும் குறைவாக கடன் பெற்ற பயனாளிகளுக்கு மட்டுமே வட்டிச் சலுகை வழங்கப்படும்.
கொரோனா ஊரடங்கால் வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்த முடியாமல் பலர் திண்டாடினர். மேலும் ஊரடங்கால் பணியை இழந்தோர் வீட்டுக் கடன், வாகன கடன், தனி நபர் கடன் ஆகியவற்றுக்கான ஈஎம்ஐ செலுத்த முடியாமல் தவித்தனர்.
இதை கருத்தில் கொண்டு 6 மாதத்திற்கு மோரடோரியம் எனப்படும் ஈஎம்ஐயை 6 மாதத்திற்கு செலுத்துவதை ஒத்தி வைக்கும் திட்டத்தை அறிவித்தது.
மத்திய அரசு
அதன்படி மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய 6 மாதங்களுக்கு மாரடோரியம் போட்ட வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் வட்டி வசூலித்து புதிய கடன் அட்டவணையை வங்கி அனுப்பியது. இதற்கு வாடிக்கையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டது.
6 மாதத்திற்கு
இந்த நிலையில் வட்டிக்கு வட்டியை தள்ளுபடி செய்ய மத்திய அரசு முன் வந்துள்ளது. இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், மார்ச் 1 முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரையிலான காலகட்டத்திற்கு பெற்ற கடன்களுக்கு வட்டிக்கு வட்டி இல்லை.
வட்டிக்கு வட்டி
உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து ரூ 2 கோடி வரையிலான வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்யப்படுகிறது. வீட்டுக் கடன், தனிநபர் கடன், சிறுகுறு தொழில், கல்வி, வாகன கடன், நுகர்வோர் கடன் ஆகிய கடன்களுக்கு வட்டிக்கு கூடுதல் வட்டி இல்லை. ஸ்டேட் வங்கி உள்பட அனைத்து தேசிய வங்கிகளிலும் கடன் பெற்ற பயனாளிகளுக்கு வட்டி சலுகை வழங்கப்படுகிறது.
நிதி நிறுவனங்கள்
ரூ 2 கோடிக்கு மேல் வங்கிகள், நிதி நிறுவனங்களில் கடன் பெற்றவர்களுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி இல்லை. கொரோனா கால நிவாரணமாக வங்கிகளில் கடன் பெற்ற பயனாளிகளுக்கு வட்டிக்கு வட்டி தள்ளுபடி செய்து அறிவித்துள்ளது. கடன் அட்டை (கிரெடிட் கார்டு) நிலுவைத் தொகை வைத்திருப்போருக்கும் 6 மாத வட்டிக்கு வட்டி தள்ளுபடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.