லாக்டவுன் காலத்தில் மரணம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இல்லை: மத்திய அரசு
டெல்லி: லாக்டவுன் காலத்தில் மரணம் அடைந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த தகவல்கள் இல்லை என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் மார்ச் 25 முதல் 68 நாட்கள் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பின்னர் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன.
நாட்டின் எதிர்கால மருத்துவர்கள் தற்கொலை...நீட் தேர்வு ரத்து செய்க...டிஆர் பாலு மக்களவையில் பேச்சு!!
புலம்பெயர் தொழிலாளர்கள் அவலம்
லாக்டவுன் காலத்தில் பல்வேறு மாநிலங்களில் சிக்கிய பிற மாநிலத் தொழிலாளர்கள் பெரும்துயரை சந்தித்தனர். பிழைக்க வந்த இடத்தில் வருவாய்க்கு வழி இல்லாமல், தங்க இடம் இல்லாமல் சொந்த மாநிலத்துக்கும் செல்ல முடியாமல் பல லட்சக்கணக்கான பிற மாநிலத்தவர் தவித்தனர்.
செத்து மடிந்த தொழிலாளர்கள்
ஒருகட்டத்தில் பிற மாநிலத்தவர் சொந்த ஊர்களுக்கு நடைபயணமாகவே சென்றனர். பல ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சொந்த மாநிலங்களுக்கு பல வாரங்களாக நடந்தே சென்ற பேரவலங்களும் நிகழ்ந்தன. இப்படியாக சென்றவர்கள் விபத்துகளில் சிக்கியும் பசியில் செத்தும் மடிந்த சம்பவம் தேசத்தை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
புலம்பெயர் தொழிலாளர் மரணம்- கேள்வி
இதன்பின்னரே புலம் பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இது தொடர்பாக இன்று லோக்சபாவில் கேள்வி எழுப்பப்பட்டது. கொரோனா லாக்டவுன் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் எத்தனை பேர் உயிரிழந்தனர்? உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு மத்திய அரசு என்ன உதவிகளை வழங்கியிருக்கிறது என்று லோக்சபாவில் எழுத்துப்பூர்வமாக கேள்வி கேட்கப்பட்டது.
மத்திய அரசிடம் தகவல்கள் இல்லை
இதற்கு மத்திய தொழிலாளர் நலன் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகமானது, கொரோனா லாக்டவுன் காலத்தில் இறந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குறித்த விவரங்கள் இல்லை. ஆகையால் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு நட்ட ஈடு எவ்வளவு தரப்பட்டது என்ற கேள்வியே எழவும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.