மிக மோசமான நிலையில் மகாரஷ்டிரா... மீண்டும் தீவிரமடையும் கொரோனா... எப்போது திரும்பும் இயல்பு நிலை?
டெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என அம்மாநிலத்தின் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பரவல் கடந்தாண்டு அக்டோபர் மாதம் முதல் பல மாநிலங்களில் குறைந்து வருகிறது. இருப்பினும், மாகாரஷ்டிரா, கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் வைரஸ் பரவல் மீண்டும் அதிகரித்துள்ளது. இது குறித்து மத்திய அரசும் சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.
வைரஸ் பரவலைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், சில மாநிலங்களில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக, மகாராஷ்டிராவில் கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
கொரோனா பாதிப்பு
கடந்த 129 நாட்களில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 8,807 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,21,119ஆக உயர்ந்துள்ளது. அதேபோல கடந்த டிசம்பர் 24ஆம் தேதிக்குப் பின் இல்லாத அளவுக்கு கொரோனா உயிரிழப்புகளும் அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 80 பேர் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளனர். மகாராஷ்டிராவில் மட்டும் இதுவரை 51,937 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் மும்பை
மகாராஷ்டிர தலைநகர் மும்பையிலும் நிலைமை தொடர்ந்து மோசமாகி வருகிறது. கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு மும்பையில் கொரோனா பாதிப்பு 1,167ஆக உயர்ந்துள்ளது. அதேபோல புனே, அகோலா மற்றும் நாக்பூர் உள்ளிட்ட நகரங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநிலத்தில் வேகமெடுத்துள்ள கொரோனா பரவல், தடுப்பூசி செலுத்தும் பணிகள் குறித்து மாகாரஷ்டிரா அமைச்சரவைக்கு விரிவான அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
தாராவியில் என்ன நிலை
ஆசியாவிலேயே மிகப் பெரிய குடிசைப் பகுதியான தாராவியில் கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. ஒரு கட்டத்தில் கொரோனா ஹாட்ஸ்பாட்டாக இருந்த தாராவியை அம்மாநிலத்தின் சுகாதாரத் துறையினரின் தீவிர நடவடிக்கையால் கொரோனா இல்லாத பகுதியாக மாற்றப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக ஒற்றை இலக்கில் மட்டுமே உறுதி செய்யப்பட்டு வந்த கொரோனா பாதிப்பு, இப்போது மீண்டும் இரட்டை இலக்கை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அங்கு மட்டும் 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா உயிரிழப்பு
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள டாஸ்க் ஃபோர்ஸ் உறுப்பினர் ராகுல் பண்டிட், "கொரோனா பரவல் அதிகரிக்கும் இடங்களில் 7 முதல் 14 நாட்களில் உயிரிழப்புகளும் அதிகரிக்கும். அடுத்த 10 நாட்கள் மகாராஷ்டிராவுக்கு முக்கியமானதாக இருக்கும். அதைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும்" என்றார். ஜனவரி மாதம் 1.7% இருந்த கொரோனா உயிரிழப்பு விகிதம் பிப்ரவரி மாதம் 0.4% ஆக குறைந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்,
உருமாறிய கொரோனா
அதேபோல மகாராஷ்டிரா உள்ளிட்ட மூன்று மாநிலங்களில் தற்போது வரை குறைந்தபட்சம் இரண்டு உருமாறிய கொரோனா வகைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்தற்கு இதுதான் காரணமா என்பது குறிக்கு உறுதியாக தெரியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். பிரிட்டன் நாட்டில் பரவ தொடங்கிய உருமாறிய கொரோனா பரவல் தான் அந்நாட்டையே முற்றிலுமாக புரட்டிப் போட்டது குறிப்பிடத்தக்கது.