'புதிய தலைவலி டெல்டா+.. 3ஆம் அலை ஏற்படுத்தும் என கூற முடியாது, ஆனால்..' எச்சரிக்கும் வல்லுநர்
டெல்லி: தற்போது உள்ள தரவுகளை வைத்துப் பார்க்கும் போது டெல்டா பிளஸ் கொரோனாவால் 3ஆம் அலை ஏற்படும் என உறுதியாகக் கூற எந்த ஆதாரமும் இல்லை என மருத்துவ வல்லுநர் டாக்டர் அனுராக் அகர்வால் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை தற்போது தான் மெல்லக் கட்டுக்குள் வந்துள்ள நிலையில், டெல்டா வகை கொரோனா மேலும் உருமாறிய டெல்டா பிளஸ்ஸாக மாறியுள்ளது புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புதிய டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதால் மூன்றாம் அலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாகச் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
யார் நாங்களா.. இல்லவே இல்லை.. எடப்பாடி பழனிசாமி புகாருக்கு வரிந்து கட்டி வந்த அமைச்சர்!
கொரோனா 3ஆம் அலை
இந்நிலையில் இது குறித்து ஜீனோமிக்ஸ் மற்றும் ஒருங்கிணைந்த உயிரியல் நிறுவனத்தின் (ஐஜிஐபி) இயக்குநர் டாக்டர் அனுராக் அகர்வால் கூறுகையில், "இந்தச் சூழலில் நமக்கு இருக்கும் தரவுகளைக் கொண்டு பார்க்கும்போது டெல்டா பிளஸ் கொரோனா 3ஆம் அலையை ஏற்படுத்தும் என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் எதுவும் இல்லை. இது குறித்துத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
குறைவாக உள்ளது
மகாராஷ்டிராவில் இருந்து கடந்த ஏப்ரல் மே மாதங்களில் சேகரித்த 3500க்கும் மேற்பட்ட மாதிரிகளைச் சோதனை செய்தோம். அதில் சிலருக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு இருந்தது. ஆனால், ஒட்டுமொத்தமாக வைரஸ் பாதிப்புடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு குறைவாகவே உள்ளது. தற்போது நிலைமை சீராகவே உள்ளது.
கொரோனா 2ஆம் அலை
அதாவது நான் சொல்ல வருவது ஒன்றுதான். தற்போது பரவும் எந்த உருமாறிய கொரோனா குறித்தும் நாம் அதிகம் கவலை கொள்ளத் தேவையில்லை. ஏனென்றால் நாட்டில் இன்னும் வைரஸ் பரவலின் 2ஆம் அலையே முடிவுக்கு வரவில்லை. அதற்குள் நாம் கொரோனா 3ஆம் அலை குறித்துக் கவலைப்படத் தேவையில்லை. டெல்டா பிளஸ் கொரோனாவால் 3ஆம் அலை ஏற்படும் என்று கூற எந்த ஆதாரமும் இல்லை. அதேநேரம் நாம் முதலில் 2ஆம் அலையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்." என்றார்.
கவலைக்குரிய கொரோனா வகை
தமிழ்நாட்டில் ஒருவர் உட்பட இந்தியாவில் நேற்று வரை மொத்தம் 40 பெருக்குக்கு டெல்டா பிளஸ் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த கொரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதாகக் குறிப்பிட்டுள்ள மத்திய அரசு இதனைக் கவலைக்குரிய கொரோனா வகை என்றும் பட்டியலிட்டுள்ளது. அதாவது சீனாவில் முதலில் பரவ தொடங்கிய கொரோனா வகையைக் காட்டிலும் வேகமாகப் பரவும் கொரோனா வகைகள் இப்படி கவலைக்குரிய கொரோனா வகை எனப் பட்டியலிடப்படும்.
இம்யூன் எஸ்கேப்
இந்த புதிய உருமாறிய டெல்டா பிளஸ் கொரோனா இம்யூன் எஸ்கேப் என்ற திறனைப் பெற்றுள்ளது. அதாவது முன்பு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு அவர்கள் உடலில் இயற்கையாகத் தோன்றிய ஆன்டிபாடிகளில் இருந்து இந்த டெல்டா பிளஸ் கொரோனா வகை தப்பிக்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, குணமடைந்தவர்களுக்கு மீண்டும் வைரஸ் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.