கொரோனாவுக்கு எம்எம்ஆர் தடுப்பு ஊசி பாதுகாப்பானது அல்ல...செரம் இன்ஸ்டிடியூட் தகவல்!!
டெல்லி: தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா போன்ற வைரஸ் தொற்று நோய்களுக்கு போடப்படும் எம்எம்ஆர் தடுப்பு ஊசியை கொரோனாவுக்கு போட்டுக் கொள்வது பாதுகாப்பானது அல்ல, அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று புனேவில் இருக்கும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் எம்எம்ஆர் தடுப்பு ஊசியை செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா அதிகளவில் தயாரித்து வருகிறது. குழந்தை பிறந்தவுடன் ஒன்பது மாதங்களில் எம்எம்ஆர் தடுப்பு ஊசி போடப்படுகிறது. தட்டம்மை, பொன்னுக்கு வீங்கி, ருபெல்லா போன்ற நோய்களை வராமல் தடுப்பதற்காக போடப்படுகிறது. இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொண்டால், கொரோனாவுக்கு பாதுகாப்பானது என்று செய்திகள் பரவ, இந்த ஊசிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. மருத்துவமனைகளில் இந்த ஊசியை போட்டுக் கொள்ள பெரியவர்களும் வரிசையில் காத்துக்கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு முன்னதாக டிபிக்கு போடப்படும் பிசிசி தடுப்பு ஊசியை போடலாம் என்று ஒரு செய்தி உலவி வந்தது. சீனாவில் கொரோனா வைரஸ் பரவுவதற்கு முன்பு அந்த நாட்டில் இருப்பவர்கள் அனைவருக்கும் கட்டாயப்படுத்தி இந்த தடுப்பு ஊசி போடப்பட்டதால், பெரிய அளவில் கொரோனா பரவவில்லை என்று கூறப்பட்டது. இந்தியர்கள் பொதுவாக இந்த ஊசியை போட்டுக் கொள்வதால், இந்தியாவில் பெரிய அளவில் கொரோனா பரவவில்லை என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த ஊசி கொரோனாவை கட்டுப்படுத்துமா? குணப்படுத்துமா? என்பதை இதுவரை யாரும் நிரூபிக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலத்திலும் இதுதொடர்பான ஆய்வு நடந்து வருகிறது.
இந்த நிலையில்தான், தற்போது எம்எம்ஆர் தடுப்பு ஊசி குறித்த செய்தி பரவலாக பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து புனேவில் இருக்கும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியாவின் தலைமை செயல் அதிகாரி அதர் பூனாவாலா அளித்திருக்கும் பேட்டியில், ''கொரோனாவை எம்எம்ஆர் தடுப்பு ஊசி கட்டுப்படுத்தும் என்பதற்கான நேரடி ஆய்வு முடிவுகள் எதுவும் இல்லை. மேலும், பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த தடுப்பு ஊசியை போட்டுக் கொள்ளக் கூடாது. வீக்கம், வலி, காய்ச்சல், எரிச்சல், சிவப்பு தழும்புகள் போன்றவை ஏற்படும்'' என்று தெரிவித்துள்ளார்.
பத்து வயதுக்கு மேற்பட்டவர்கள் இந்த ஊசியை போட்டுக் கொள்ளும்போது பாதிப்பு இருக்கிறது என்கிறபோதும், எம்ஆர் தடுப்பு ஊசி மட்டும் போட்டுக் கொள்ளலாம் என்றும் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது. அதாவது இந்த வகையான தடுப்பு ஊசியில், தட்டம்மை, ருபெல்லாவை தடுக்கும் எதிர்ப்பு சக்தி இருக்கும்.
ஊரடங்கால் உணவின்றி தவித்த ஏழைகள்.. பரிவோடு 3 வேளை சாப்பாட்டுக்கு வழி செய்த பல்லாவரம் துணை கமிஷனர்
பிரிட்டனில் இருக்கும் ஆக்ஸ்போர்டு நிறுவனத்துடன் செரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா இணைந்து கொரோனாவுக்கான தடுப்பு மருந்து ஆய்வில் ஈடுபட்டுள்ளது. இந்த ஆய்வில் வெற்றி பெற்றால், இந்தியாவில் கொரோனாவுக்கான தடுப்பு மருந்தை இந்த நிறுவனம்தான் வழங்கும் என்றும் ஒரு தடுப்பு மருந்து ரூ. 1000 என்ற விலையில் அறிமுகம் செய்யப்படும் என்றும் செரம் இன்ஸ்டிடியூட்ஏற்கனவே அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.