இடம் பெயர் தொழிலாளர் பயண கட்டணம், உணவு, நீருக்கு மாநில அரசுகளே பொறுப்பு- சுப்ரீம்கோர்ட் உத்தரவு
டெல்லி: கொரோனா லாக்டவுனால் அவதிப்படும் இடம்பெயர் தொழிலாளர்கள் நிலைமை குறித்து வேதனைப்படுவதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் இடம்பெயர் தொழிலாளர்களிடம் பயண கட்டணங்களை வசூலிக்காமல் மாநில அரசுகளே அதை செலுத்த வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லாக்டவுன் காலத்தில் இடம்பெயர் தொழிலாளர்கள் அனுபவித்து வரும் துயரம் கேட்பாரற்று கிடந்தது. பசியாலும் விபத்துகளாலும் கொத்து கொத்தாய் இடம்பெயர் தொழிலாளர்கள் மாண்டு போகினர்.
இந்த நிலையில் உச்சநீதிமன்றம், இடம்பெயர் தொழிலாளர்கள் நிலைமை தொடர்பாக தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணைகளின் போது, இடம்பெயர் தொழிலாளர்களை மத்திய- மாநில அரசுகள் அலட்சியம் செய்துவிட்டன என கடுமையாக சாடியது உச்சநீதிமன்றம்.
கொரோனா.. உலகளவில் 5,788,312 பேர் பாதிப்பு.. அமெரிக்காவில் பலி எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியது
உச்சநீதிமன்றத்தில் விசாரணை
மேலும் மத்திய- மாநில அரசுகள் இதுவரை தாங்கள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனிடையே உச்சநீதிமன்றத்தில் இன்றும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், எஸ்.கே. கவுல், எம்.ஆர்.ஷா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இதனை விசாரித்தது.
ரயிலில் 91 லட்சம் பேர்
அப்போது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மே 1-ந் தேதி முதல் சிறப்பு ரயில்கள் மூலம் இதுவரை 91 லட்சம் பேர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் என்றார். மேலும் இடம்பெயர் தொழிலாளர்கள் எவ்வளவு காலத்துக்குள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள் என்ற கேள்வியையும் உச்சநீதிமன்றம் எழுப்பியது. இதனை தொடர்ந்து, அனைத்து இடம்பெயர் தொழிலாளர்களுக்கான பயண கட்டணங்களையும் அவர்களிடம் வசூலிக்கக் கூடாது; மாநில அரசுகள் செலுத்த வேண்டும். அவர்களுக்கான உணவு, குடிநீர் வசதிகளை மாநில அரசுகள்தான் செய்து தர வேண்டும்.
மாநில அரசுகளின் பொறுப்பு
பயணங்களின் போது ரயில்வே நிர்வாகம் உணவு ஏற்பாடு செய்திருந்தாலும் இடம்பெயர் தொழிலாளர்கள் சென்றடையும் ரயில் நிலையங்களிலும் உணவுக்கான ஏற்பாடுகளை மாநில அரசுகள் செய்ய வேண்டும். இடம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு செல்ல பதிவு செய்தால் அவர்களை எவ்வளவு விரைவாக அனுப்ப இயலுமோ அந்த அளவுக்கு விரைவாக மாநில அரசுகள் அனுப்பி வைக்க வேண்டும்.
மத்திய- மாநில அரசுகள் அறிக்கை தாக்கல்
சொந்த மாநிலங்களுக்கு செல்ல விரும்பும் இடம்பெயர் தொழிலாளர்களை பிற மாநில அரசுகள் தடுத்து நிறுத்தவும் கூடாது. நடைபயணமாக சொந்த ஊர் செல்லும் இடம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும். இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் விரிவான அறிக்கையைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.