அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்ற கொள்கை மாற வாய்ப்பு.. ராஜ்நாத் சிங் அதிரடி கருத்து
டெல்லி: இந்தியாவின் அணு ஆயுத கொள்கை வருங்காலத்தில் மாறக்கூடிய வாய்ப்பு இருப்பதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் சென்றிருந்தார் ராஜ்நாத் சிங். அங்கு வாஜ்பாய் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் அவர். இதன்பிறகு ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள ட்வீட்டுகள் முக்கியத்துவம் பெறுகிறது. அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது:
வாஜ்பாயின் முதலாவது ஆண்டு நினைவு தினத்தை நாடு அனுசரித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், நான் ஜெய்சால்மர் பகுதிக்கு வந்து இருப்பது தற்செயலாக முக்கியத்துவமானது.
ஜெய்சால்மர் நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு உடனடியாக பொக்ரான் செல்கிறேன். வாஜ்பாய்க்கு எனது மரியாதையை அங்கு செலுத்துவேன். இந்தியாவை அணு ஆயுத சக்தி கொண்ட நாடாக மாற்ற வாஜ்பாய் எடுத்த முடிவில் பொக்ரான் பகுதி முக்கியத்துவமானது.
Pokhran is the area which witnessed Atal Ji’s firm resolve to make India a nuclear power and yet remain firmly committed to the doctrine of ‘No First Use’. India has strictly adhered to this doctrine. What happens in future depends on the circumstances.
— Rajnath Singh (@rajnathsingh) August 16, 2019
எந்த நாட்டுக்கு எதிராகவும் அணு ஆயுதத்தை முதலில் பயன்படுத்த மாட்டோம் என்பது இந்தியாவின் கொள்கை. அதில் எப்போதும் உறுதியாக இருந்திருக்கிறோம். அதேநேரம் சூழ்நிலைகளைப் பொறுத்து எதிர்காலத்தில் நிலைமை மாறக்கூடும். இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
நரேந்திர மோடி அரசு பதவி ஏற்ற பிறகு இந்தியாவின் நீண்டகால கொள்கைகள் பலவும் மாற்றப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில்தான் 70 ஆண்டுகளாக ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் அணு ஆயுத விவகாரத்தில் இந்தியா தனது கொள்கையை மாற்றிக் கொள்ளக் கூடும் என்று சூசகமாக ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ள கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் சர்வதேச நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையிடம் பாகிஸ்தான் முறையிட்டுள்ளது. லடாக் விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையை நாடுவதற்கு சீனா முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் இவ்விரு நாடுகளையும் மறைமுகமாக எச்சரிக்கும் விதத்தில் ராஜ்நாத் சிங் இவ்வாறு ஒரு கருத்தை தெரிவித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.