நாளை மறுநாள் முன்ஜாமீன் மனு மீது விசாரணை.. அவசரமாக ப.சிதம்பரத்தை கைது செய்த சிபிஐ
Recommended Video
டெல்லி: ப. சிதம்பரம் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுவை தலைமை நீதிபதி அமர்வு நாளை மறுநாள்தான் விசாரிக்க உள்ளது. இந்த நிலையில் இரவோடு இரவாக சிதம்பரம் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் சிதம்பரத்திற்கு முன்ஜாமீன் வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் நேற்று மறுப்பு தெரிவித்தது. இதையடுத்து முன் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் சிதம்பரம் தரப்பு மேல்முறையீடு செய்தது.
இன்று 10.30 மணி அளவில் நீதிபதி ரமணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவசர வழக்காக விசாரிப்பது தொடர்பாக, தான் முடிவு எடுக்க முடியாது என்றும், இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் முடிவு எடுப்பார் என்றும் ரமணா தெரிவித்து விட்டார். ஆனால், தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் அமர்வு அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்து வந்தது.
இதன் காரணமாக, தலைமை நீதிபதி அமர்வு முன்னிலையில் ப.சிதம்பரம் வழக்கறிஞர்களால் முறையிட முடியாத சூழ்நிலை நிலவியது.ஆனால், மற்றொரு பக்கம், இந்த வழக்கு இன்று சுப்ரீம் கோர்ட்டில் லிஸ்ட் செய்யப்படவில்லை. ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனுவில் குறைபாடு இருப்பதால் லிஸ்ட் செய்யவில்லை என நீதிமன்ற பதிவாளர் தெரிவித்தார்.
இதையடுத்து, மீண்டும் நீதிபதி ரமணா முன்னிலையில், ஆஜரானார் சிதம்பரம் தரப்பு வக்கீலான கபில் சிபல். தனது கட்சிக்காரரை கைது செய்ய தடை விதித்து இடைக்கால பாதுகாப்பு வழங்க அவர் கோரிக்கைவிடுத்தார். ஆனால் வழக்கு, லிஸ்ட்டிலேயே இல்லை என்பதை சுட்டிக் காட்டிய நீதிபதி ரமணா, தன்னால் எதையும் செய்ய முடியாது என்றார்.
இதன்பிறகு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அயோத்தி வழக்கு விசாரணை நடத்திய கோர்ட் ஹாலுக்கு, ப.சிதம்பரம் தரப்பு வக்கீல்கள், சல்மான் குர்ஷித் மற்றும் கபில் சிபல் ஆகியோர் சென்று அமர்ந்திருந்தனர். ஆனால், முன்ஜாமீன் மனுவை இன்று விசாரிக்குமாறு தலைமை நீதிபதி அமர்வில் ப.சிதம்பரம் தரப்பு முறையிடவில்லை. நீதிபதி தனது அலுவல் நேரத்தை முடித்து கிளம்பி சென்றுவிட்டார்.
இந்த நிலையில், வரும் வெள்ளிக்கிழமைக்கு, அதாவது நாளை மறுநாள் 23ம் தேதிக்கு, ப.சிதம்பரம் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு விசாரணைக்கு வர உள்ளதாக உச்சநீதிமன்றம் பட்டியலிட்டுள்ளது. எனவே, அதுவரை சிதம்பரத்தை கைது செய்ய எந்த சட்டப்பூர்வ தடையும் இல்லை.
இருப்பினும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும்போது, கைது செய்வது மரபாக இருந்தது கிடையாது. ஆனால் இன்று இரவோடு இரவாக சிதம்பரத்தை சிபிஐ அவரது டெல்லி இல்லத்தில் வைத்து கைது செய்துள்ளது.