மொழி திணிப்பு, எதிர்ப்பு கூடாது- இந்தி பேசும் மாநிலங்கள் பிற மொழி கற்க வேண்டும்: வெங்கையா நாயுடு
டெல்லி: எந்த ஒரு மொழியையும் திணிக்கவும் கூடாது; அதேபோல் எதிர்க்கவும் கூடாது என்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
இந்தி தினத்தை முன்னிட்டு மதுபன் புத்தக நிறுவனம் ஏற்பாடு செய்த இணைய கருத்தரங்கில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:
இந்தியா ஒரே நாடு அல்ல.. இந்தி பொதுமொழி அல்ல.. அன்றே ராஜ்யசபாவில் கர்ஜித்த அண்ணா பிறந்த நாள் இன்று!
வளமையான மொழிகள்
நமது அனைத்து மொழிகளும் வளமான வரலாறை கொண்டுள்ளன. நமது மொழிகளின் பன்முகத்தன்மை மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை எண்ணி நாம் பெருமைப்பட வேண்டும். தென்னிந்திய இந்தி பிரசார சபையை மகாத்மா காந்தி 1918ம் ஆண்டு ஏற்படுத்தினார்.
பிற மொழி கற்க வேண்டும்
இந்தி மற்றும் பிற இந்திய மொழிகள் ஒன்றுக்கொன்று நிறைவை ஏற்படுத்தும் வகையில் பார்க்கப்பட வேண்டும். மக்களிடையே நல்லெண்ணம், அன்பு மற்றும் பாசத்தை அதிகரிக்க, இந்தி பேசாத மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் இந்தி கற்க வேண்டும். இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்கள் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற ஏதாவது ஒரு மொழியை கற்க வேண்டும்.
தேசிய கல்வி கொள்கை
தேசிய கல்வி கொள்கை 2020-ல் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருங்கிணைந்த கல்விக்கு, தாய்மொழியில் கல்வி கற்பிக்கப்பட வேண்டும் ‘‘இது பாடத்தை குழந்தைகள் புரிந்து கொண்டு படிக்கவும், சிறப்பாக வெளிப்படுத்த உதவும்.
தாய்மொழி புத்தகங்கள்
தாய்மொழியில் கல்வி கற்க, நல்ல புத்தகங்கள் இந்தி மற்றும் இதர இந்திய மொழிகளில் எளிதில் கிடைப்பதில் புத்தக வெளியீட்டு நிறுவனங்கள் முக்கிய பங்காற்ற வேண்டும். இவ்வாறு வெங்கையா நாயுடு கூறினார்.